Saturday, June 21, 2014

பழைய மூளைக்குள் சில புதிய மூலைகள் – 2

First published by Solvanam.com

Neuro1
ஒரு பெரிய நகரத்தில் வாழ்வதால் ஒளி மாசுபாடு (Light Pollution) காரணமாக இரவில் வான் நட்சத்திரங்களை பார்த்து பழக்கமற்ற என் நண்பரின் குழந்தை ஒன்று, ஓரிரவு அபூர்வமாக வானில் நட்சத்திரங்களை பார்த்தபோது, வானம் தான் சமீபத்தில் பார்த்த ப்ளனடேரியம் (Planetarium) போலவே இருக்கிறது என்று சொன்னது வேடிக்கையாய் இருந்தது. அதுபோல் சில சமயங்களில் இயற்கையாக உருவாகியிருக்கும் சில விஷயங்களை நமக்கு பரிச்சயமான சில செயற்கை விஷயங்களோடு ஒப்பிட்டு புரிந்து கொள்வது எளிதாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.
அப்படிப்பார்த்தால், மூளையை உங்கள் மேஜை கணினிக்கும், நமது புலன்களை கீ போர்டு, மவுஸ், காமிரா போன்ற கணினியுடன் இணைந்து இயங்கும் கருவிகளுக்கு இணையாகவும் உருவகிக்கலாம். கணினிகளில் நிறைய யு‌எஸ்‌பி (USB) துறைமுகங்கள் அமைக்கப்பட்டு புலன் கருவிகளை இணைத்துக்கொள்ள வழி செய்யப்பட்டு இருப்பதைப்போல் மூளையிலும் வரும் செய்திகளைப்பெற்றுக்கொள்ள குறைந்தது ஐம்புலன்கள் என்ற ஐந்து துறைமுகங்கள் காத்திருக்கின்றன. ஒரு மவுஸ் கணினியுடன் இணைக்கப்படும் யு‌எஸ்‌பி போர்ட்டில் (USB Port) அதற்கு பதில் ஒரு ஜாய் ஸ்டிக் (Joy Stick) அல்லது தொடுபலகை (Touch Pad) ஒன்றை இணைத்தும்கூட நிலைக்காட்டியை (Cursor) நாம் நகர்த்த இடும் கட்டளைகளை கணினிகள் புரிந்துகொண்டு செயல்படுவதைப்போல் மூளையாலும் செயல்பட முடிகிறது. என்ன, அந்த ஜாய் ஸ்டிக், தொடுபலகை, மவுஸ் என்று கணினியுடன் இணைக்கப்படும் ஒவ்வொரு விதமான உணர்விகளையும் கணினிகள் புரிந்துகொள்ள பல மென்பொருள் பொறியாளர்கள் டிரைவர் (Driver), அப்ளிகேஷன் (Application) என்று நிரலிகள் எழுதி அவற்றை கணினிகளில் ஓட்டி எல்லாம் ஒழுங்காக வேலை செய்கின்றனவா என்று சோதித்து மாதக்கணக்கில் மெனக்கிட வேண்டும். இயற்கை உயிரியலில் பரிணாமவளர்ச்சி என்ற பொறியாளரைக்கொண்டு இந்தக்காரியங்களை எல்லாம் எப்போதோ செய்து முடித்திருப்பதுபோல் தெரிகிறது! துரதிருஷ்டவசமாக நமக்கு எளிதாக புரியும்படியான பயனர் கையேடு (User Guide), வடிவமைப்பு விவரக்குறிப்பு (Design Specification) எதையும் இயற்கை மூளையோடு சேர்த்து நமக்கு கொடுக்கவில்லை. எனவே நாமாகவே தட்டுத்தடுமாறி அந்த கொசகொசப்பு எப்படி இயங்குகிறது, வேறு என்னென்ன உணர்விகளை அதன் துறைமுகங்களில் இணைக்கலாம் என்று புரிந்து கொள்ளவேண்டி இருக்கிறது!
Neuro2
குழந்தைகள் பெரியவர்கள் முதுகில் எதையாவது எழுதி நான் என்ன எழுதினேன் என்று கேட்டு கண்டுபிடிக்கச்சொல்லி விளையாடுவது நம் எல்லோருக்கும் பழகிய விஷயம். 1960களிலேயே இதை எந்த அளவு துல்லியமாக செய்ய முடியும் என்று ஆராய ஒரு சாய்வு நாற்காலி தயாரித்து அதன் முதுகு பக்கத்தில் 100×100 என்கிற கணக்கில் மழுங்கிய பிளாஸ்டிக் ஆணிகளை அமைத்தார்கள். நாற்காலியில் சட்டை போடாமல் ஒருவரை உட்கார வைத்து, இந்த மேட்ரிக்ஸ் அமைப்பில் உள்ள குமிழ்களை பின் புறத்தில் இருந்து அவர் முதுகை நோக்கி தள்ளி, அருகிலுள்ள படங்களில் காணப்படும் பிக்ஸெலெடெட் (Pixelated) உருவங்களை முதுகில் தோன்றும் அழுத்தங்களைக்கொண்டு அவரால் புரிந்து கொள்ள முடிகிறதா என்று சோதித்தார்கள். முதலில் கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் சில மணி பயிற்சிக்குப்பின் பொதுவாக எல்லோராலும் தங்கள் கண்களை மூடிக்கொண்டு முதுகில் தோன்றும் அழுத்தங்களை உணர்ந்து தங்கள் மனக்கண்களில் எளிதான உருவங்களை பார்க்க முடிந்தது! மோனாலிசாவின் மர்மப்புன்னகையை புரிந்து ரசிக்க இந்த அமைப்பின் துல்லியம் (Resolution) போதாது என்றாலும், இந்த பரிசோதனையின் மூலம் நன்றாக வேலை செய்யும் கண்களை கொண்டவர்கள் கூட தொடு உணர்வின்மூலம் “பார்க்க முடியும்” என்று தெரிந்தது.
Neuro3தை அடுத்து சாய்வு நாற்காலியில் சாய்ந்து இருக்கும்போது மட்டும் இல்லாமல் மற்ற நேரங்களிலும் ஸ்பரிச உணர்வை உபயோகித்து பார்ப்பது எப்படி என்று 80களில் யோசித்துக்கொண்டிருந்த விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த டாக்டர். பால் பாக்கி ரீட்டா (Paul Bach-y-Rita), முதுகைவிட தொடு உணர்த்திறன் மிகவும் அதிகமான நாவினை இதற்கு உபயோகிக்க திட்டமிட்டார். வைகேப் (Wicab) என்ற ஒரு சிறிய கம்பெனியை ஆரம்பித்து அதன் வழியே இதற்காக அவர் வடிவமைத்த சிறிய மெல்லிய சர்க்யூட் போர்டு உங்கள் நாக்கின் மேல் பொருந்த வல்லது. 25×25 புள்ளிகள் கொண்ட அந்த சர்க்யூட் போர்டு ஒயர்களால் ஒரு கணினியுடன் இணைக்கப்பட்டு, மெல்லிய மின் அதிர்வுகளை அந்த தொடுபுள்ளிகளின் (Contact Points) வழியாக நாக்கிற்கு அனுப்பியது. லேசான, சும்மா ஒரு 9 வோல்ட் பேட்டரியை நக்கினால் நாவில் தோன்றுமே, அத்தகைய உணர்வு. அவ்வளவுதான். அந்த மேட்ரிக்ஸின் வெளி விளிம்பில் இருக்கும் புள்ளிகள் மட்டும் மின்சாரத்தை வழங்கி அதிர்ந்தால், மூளையால் ஒரு சதுரவடிவை பார்க்க முடிந்தது!
Neuro4ந்த ஆரம்ப கட்டங்களைத்தாண்டி இப்போது சென்ற இதழில் சொன்னதுபோல் ஒரு சிறிய காமிரா வழியே வரும் பிம்பங்களை கருப்பு வெள்ளை சாம்பல் நிற பிக்ஸல் படமாக மாற்றி நாக்கிற்கு அனுப்புகிறார்கள். கருப்பு நிறத்தைக்குறிக்க மின் அதிர்வு ஏதும் கிடையாது. சாம்பல் நிறத்துக்கு லேசாகவும் வெள்ளை நிறத்துக்கு சற்று அதிகமாகவும் மின் அதிர்வுகளை நாவிற்கு அனுப்பினால், மூளையால் அதை புரிந்து கொள்ள முடிகிறது. பிறவியிலேயே கண் தெரியாதவர்கள் மட்டுமின்றி, சாதாரணமாக பார்வை உள்ள நீங்களும் உங்கள் கண்களை கட்டிக்கொண்டு, இந்த சர்க்யூட் போர்டை வாயில் வைத்து லாலிபாப் போல சப்ப ஆரம்பித்தால், கிடைக்கும் சமிக்ஞைகளை ஓரிரு மணி நேர பயிற்சியிலேயே புரிந்துகொண்டு சுவற்றில் மோதிக்கொள்ளாமல் புதிய இடங்களில் நடக்கவும், தரையில் கருப்பு பெயிண்ட்டால் வரையப்பட்ட கோடுகளுக்குள் நடக்கவும் பழகி விடுவீர்கள்!
இந்த முறையை பயன்படுத்தி கோச்சடையான் படமெல்லாம் நிச்சயம் பார்க்க முடியாது என்றாலும், இந்த ஆய்வுகளின் மூலம் மனித மூளையின் கிரகிப்புத்தன்மை பற்றி இன்னும் கொஞ்சம் தெரிய வருகிறது. மெக்ஸிகோ தேசத்தில் பிறந்து அமெரிக்காவில் பணி புரிந்து வந்த டாக்டர். பாக்கி ரீட்டா 2006ல் காலமாகி விட்டார் எனினும், அவர் தொடங்கிய இந்தக்கம்பெனி இப்போது பல நாடுகளில் ப்ரெய்ன் போர்ட் (Brain Port) V100 என்ற பெயரில் இந்த கருவியை கண் தெரியாதவர்களுக்காக விற்று வருகிறது.
Neuro5ன்னொரு இஸ்ரேலிய நிறுவனம், இதே தத்துவத்தை உபயோகித்து வடிவமைத்திருக்கும் VIA என்கிற பார்வையற்றவர்களுக்கான கருவி, நாகரீக அலங்கார நகை போல (Fashion Accessory) அமைக்கப்பட்டு இருக்கிறது. ஜோடியாக விற்கப்படும் இவற்றை கைக்கு ஒன்றாக அணிந்து கொண்டால், வழக்கமான கைத்தடிக்கு தேவை இல்லாமல் பார்வையற்றவர்கள் நடமாட முடியும். இதிலேயே GPS தொழில்நுட்பமும் இணைக்கப்பட்டு இருப்பதால், வாய் வார்த்தையால் எங்கே போக வேண்டும் என்று சொல்லிவிட்டால் போதும். எதிரே வரும் இடையூறுகளுக்கேர்ப்ப இது இரண்டு மூன்று விதங்களில் நம் கைகளைச்சுரண்டி போக வேண்டிய இடத்திற்கு வழி காட்டும்! 
பிரைல் (Braille) முறையில் பார்வையற்றவர்கள் படிப்பது கூட தொடு உணர்வை பார்வை திறனுக்கு பதிலாக பயன் படுத்துவதற்கு ஓர் உதாரணம்தானோ என்று நினைக்கலாம். அதில் ஒரு வேறுபாடு பிரைல் புத்தகங்களைப்படிக்கும்போது பார்வையற்றவர்கள் எழுத்துக்களை பார்ப்பதில்லை. தாம் தொடுவது என்ன எழுத்து/வார்த்தை என்று நேராகவே புரிந்துகொண்டு விடுகிறார்கள். எனவே அதை இன்னொரு விதமான புதிய திறனாக எடுத்துக்கொள்ளலாம். பார்வை சம்பந்தப்பட்ட சமிக்ஞைகளை கண்கள் இல்லாவிட்டால் தொடு உணர்வின் மூலமாகத்தான் பெறவேண்டும் என்றும் ஏதும் கட்டாயம் இல்லை. வௌவால்களைப்போல நம்மாலும் எதிரொலியின் உதவியுடன் பார்வைத்திறன் இல்லாமல் நடமாட முடியும் என்பது இந்த யூட்யூப் வீடியோவைப்பார்த்தால் புரியும்! இதில் நமது கண்கள் மூளைக்கு அனுப்ப வேண்டிய செய்திகளை செவிகள் வழியே மூளைக்கு அனுப்புகிறோம்!
நமது காதுகளுக்குள் இருக்கும் மூன்று அரைவட்ட கால்வாய் அமைப்பு ஒரு முந்திரிப்பருப்பு சைஸ்தான். பக்கத்தில் உள்ள படத்தில் பழுப்பு நிற காது மடலுக்கு வலது புறம் சற்று சாயம் போனதுபோல் சிறியதாய் காணப்படும் அதே வளைய அமைப்புதான் பெரிதாக்கப்பட்டு வெளிர்சிவப்பு நிறத்தில் பாகங்கள் குறிக்கப்பட்டு மேலே உட்கார்ந்திருக்கிறது. அதற்குள் குழந்தைகளின் கிலுகிலுப்பையில் இருப்பது போல் உருண்டோடிக்கொண்டிருக்கும் சில துகள்களை வைத்துக்கொண்டு அங்கிருந்து வரும் சமிக்ஞைகளை பகுத்தறிந்து, நாம் நிற்கிறோமா, சுற்றுகிறோமா, தலைகீழாக தொங்குகிறோமா என்பது போன்ற வெளிநோக்குநிலை (Spatial Orientation) விவரங்களை, இருட்டில் நம் கண்களை கட்டிவிட்டாலும்கூட மூளை அறிந்து கொண்டுவிடுகிறது. ஆனால் சில சந்தர்ப்பங்களில் அந்த துகள்கள் எளிதாக உருண்டோட முடியாத நிலமை ஏற்படுவதுண்டு. உதாரணமாக கடுமையான ஜலதோஷத்தினால் அல்லது சாப்பிடும் சில மருந்துகளால் இந்த குழாய்கள் வீங்கி விடுவது ஒரு காரணம், அப்படிப்பட்ட நிலையில் அந்த துகள்கள் சுலபமாக உருள முடியாத சந்தர்ப்பங்களில் நமது சமநிலை உணர்வு (Sense of Balance) தவறிப்போய் சரியாக நடக்கக்கூட முடியாமல் தடுமாறுவோம்.
Neuro6
மிட்ஷல் டெய்லர் என்பவர் பாக்கி ரீட்டாவின் ஆய்வகத்தில் பணிபுரிந்து வந்த ஒரு சக ஆய்வாளர். இவருக்கு பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னால் ஒருமுறை உள் காதில் வந்த ஒரு தொற்றுநோய் (Inner ear infection) தற்காலிகமாக அவருடைய பேலன்சை ஒழித்து Neuro7எரிச்சலூட்டவும், இந்த சப்பு மிட்டாய் கருவியை கொண்டு ஏதாவது சமாளிக்க முடியுமா என்று யோசித்தார். உடனே சாதாரணமாக ஒரு காமிராவை இதனுடன் இணைத்து விளையாடிக்கொண்டிருந்த அவரது ஆய்வக சகாக்கள், காமிராவை கழற்றிவிட்டு அதற்கு பதில் வேக மாறுபாடுகளை உணரும் கருவி (Accelerometer) ஒன்றை அதனுடன் இணைத்தனர். இப்போது இந்த ப்ரெய்ன் போர்ட் கருவியை வாயில் போட்டுக்கொண்டு டெய்லர் ஒழுங்காக நின்று கொண்டிருந்தால் நாம் நான்கு பத்திகளுக்கு முன் பார்த்த அந்த சதுர மின் அதிர்வு அவர் நாக்கில் அசையாமல் நின்றது. அவர் இடது அல்லது வலது பக்கமாகவோ அல்லது முன்பின்னாகவோ சாய்ந்தால் நாக்கில் தெரிந்து கொண்டிருக்கும் சதுர மின் அதிர்வும் அதே பக்கம் வழுக்கிக்கொண்டு நகர ஆரம்பித்தது! அவ்வளவுதான். வெகுவிரைவில் மூளை அதுவாகவே, “அடேடே, காதிலிருந்து வந்து கொண்டிருந்த இந்த செய்தி நின்று போய்விட்டதே என்று நினைத்திருந்தேன். இப்போது இது வாய் வழியாக வருகிறது. பேஷ்..பேஷ்”, என்று புரிந்துகொண்டு சமநிலை உணர்வை திரும்ப கொண்டுவந்துவிட்டது!
இந்த பேலன்ஸ் புதுப்பித்தலை பற்றி புரிந்து கொள்ளும்போது, டெய்லரின் கண் பார்வையில் எந்த மாற்றமும் இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதிலிருந்து தெரிவதென்னவென்றால் நாக்கில் நிலவும் தொடு உணர்வு என்ற துறைமுகத்தின் வழியே பார்வை சம்பந்தப்பட்ட சமிக்ஞை சரக்கை மட்டும்தான் மூளைக்கு ஏற்றுமதி செய்ய முடியும் என்பதில்லை. சமநிலை உணர்வு சம்பந்தப்பட்ட சமிக்ஞை சரக்கையும் இதே துறைமுகத்தின் வழியே அனுப்பி வைக்க முடியும். ஆமாமாம், புரிகிறது என்று நாம் சொல்வதற்குள் மூளையின் இன்னொரு மூலையில் ஒளிந்திருந்த ஒரு புதிய திறன் வெளிப்பட்டது.
ஷெரில் ஷில்ட்ஸ் என்ற பெண்மணி உடம்பு சரியில்லாத போது சாப்பிட்ட ஒரு அண்ட்டய்பயாடிக் (Antibiotic) மருந்து அவருக்கு ஒத்துக்கொள்ளாமல் போய் அவருடைய காதுக்குள் ஒரு பகுதியை சேதப்படுத்த, அவரும் பேலன்ஸ் இல்லாமல் நடக்கத்தடுமாறிக் கொண்டு இருந்தார். பாக்கி ரீட்டா அவரை ஆய்வகத்துக்கு அழைத்து இந்தக்கருவியை அணிந்து கொள்ளச்சொல்லி பரிசோதித்தபோது உடனேயே அவருக்கும் பேலன்ஸ் திரும்ப வந்ததில் ஆச்சரியம் இல்லை. ஆனால் அவர் அந்த Accelerometer தொப்பி, வாயில் வைத்துக்கொண்டு இருந்த லாலிபாப் எல்லாவற்றையும் கழட்டி வைத்தபின்பும் கொஞ்ச நேரத்திற்கு பேலன்ஸ் உணர்வு தொடர்ந்தது! இன்னும் கொஞ்சம் பரிசோதனைகள் நடத்தியதில், ஷெரில் எத்தனை நேரம் இந்த கருவியை உபயோகிக்கிறாரோ, ஏறக்குறைய அதே அளவு நேரம் இந்த கருவிகளை நீக்கிய பின்னும் பேலன்ஸ் உணர்வு ஒரு எஞ்சிய விளைவாக (Residual Effect) நிலைத்திருந்தது தெரிய வந்தது! திரும்பத்திரும்ப முயற்சித்ததில், அந்த எஞ்சிய விளைவு நீண்டு கொண்டேபோய், இப்போது இந்த சிகிச்சைக்கு தினப்படி அவசியம் ஏதும் இல்லாமல் ஷெரில் தனது பேலன்ஸ் உணர்வை திரும்ப பெற்று விட்டார். இந்த யுட்யூப் வீடியோவில் ஒரு காலத்தில் ஒழுங்காக நிற்கவே தடுமாறிய அவர் இப்போது குஷியாய் தானாகவே சைக்கிள் ஓட்டிக்கொண்டு இருப்பதைப்பார்க்கலாம்! இது எப்படி சாத்தியம் என்றால், மூளை பழுதாகிப்போன அந்த ஒரிஜினல் பாதையை விட்டுவிட்டு இதே செய்திகளை வேறொரு வாயில் வழியாக திரும்ப பெற்று அதை உணர்ந்தறிய கற்றுக்கொண்டு இயங்க ஆரம்பித்து விட்டது என்கிறார்கள்!
சென்ற இதழில் நாம் சொன்னதுபோல், ஒரு புலனை நாம் இழக்கும்போது வேறு ஒரு வழியில் அந்த புலனை திரும்பக்கொண்டு வருவது ஒரு புறம் இருக்க, இத்தகைய முறைகளை உபயோகித்து இல்லாத புதிய திறன்களை கொடுத்து மனித இனத்தை மேம்படுத்துவது இன்னும் சிலாகிதம். இந்த புதிய சிந்தனையின்படி எங்கெங்கு யாருக்கு எப்படிப்பட்ட புதிய திறன்களைக்கொடுப்பது மிகவும் உபயோகமாக இருக்கும் என்று சோதித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு சுவையான உதாரணம்? இருட்டில் கூட உள் காதில் இருந்து வரும் சமிக்ஞைகளைக்கொண்டு மூளை நமக்கு பேலன்ஸ் தவறாமல் பார்த்துக்கொள்ளுகிறது என்று சொன்னோமல்லவா? அது சரிதான் என்றாலும், ராணுவ விமானிகள் மிக வேகமாக விமானங்களை ஒட்டி, செங்குத்தாக மேலேறி கீழிறங்கும்போது புவி ஈர்ப்பு விசையில் ஏற்படும் திடீர் மாறுதல்களால் இந்த பேலன்ஸ் தடுமாறும். வெளிச்சம் இருக்கும்போது கண்கள் வழியே வரும் சுற்றுப்புறத்தைப் பற்றிய செய்திகளைக்கொண்டு இந்த தடுமாறல்களை விமானிகளின் மூளை எளிதாக சமாளித்து விடும். ஆகவே அவர்களின் வெளிநோக்குநிலை (Spatial Orientation) பாதிக்கப்படாமல் தப்பித்து விடுகிறார்கள். ஆனால் இதையே இருட்டில் செய்தால் ததுங்கினதோம்தான்.
Neuro8
இருட்டில் இந்த பயிற்சி எல்லாம் ஏன் செய்யவேண்டும் என்று கேட்கலாம். போரில் எதிரி விமானமோ ஏவுகணையோ துரத்தினால் இரவாக இருந்தாலும் தப்பித்தாக வேண்டும் இல்லையா? அதற்குத்தான் இந்தப்பயிற்சி. ஆனால் அந்த வேகத்தில் இருட்டில் தன் பேலன்ஸ் தவறி, நோக்குநிலை (Orientation) குழம்பி விமானி சில வினாடிகள் தடுமாறினால் கூட உயிரிழக்க நேரும். அவர்களுக்கு நாக்கில் வைத்துக்கொள்வதற்குபதில் கைகளில் அணிந்து கொள்ள ஒரு உறையை கொடுத்து, விமானத்தின் நிலையை பொறுத்து அவர்களின் புறங்கையில் மின் அதிர்வு கிச்சுக்கிச்சு மூட்டி மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்புகிறார்கள். விமானம் ஓட்ட எந்த பயிற்சியும் பெறாதவர்கள் கூட சில நிமிடங்களிலேயே இந்த உறையை அணிந்து கொண்டவுடன் சிமுலேட்டோர்களில் (Simulator) கண்ணைக்கட்டிக்கொண்டு விபத்துக்கள் இல்லாமல் அட்டகாசமாய் விமானங்களை .எங்கேயும் போய் இடிக்காமல் ஓட்டுவதாக கேள்வி! ஃபீல் ஸ்பேஸ் (Feel Space) பெல்ட் கட்டிக்கொண்டு இருப்பவர்கள் போலவே இவர்களும் தான் எப்படி பார்வைத்திறனே தேவை இல்லாமல் விமானம் ஓட்டும் திறமைசாலியான விமானியானோம் என்று கான்ஷியஸாக சரிவரப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், விமானத்தை எங்கும் இடிக்காமல் வழி நடத்துவத்தில் மட்டும் என்னவோ சூரர்களாய் இருக்கிறார்கள்! இதே போல் ஆழ்கடலில் இருட்டில் நீந்தி பணி புரிய வேண்டியவர்களைப் (Deepsea Divers) பற்றி யோசிக்கலாம். தண்ணீருக்குள் இருக்கும்போது புவி ஈர்ப்பு விசையின் பாதிப்பு இருக்காது என்பதால் இருட்டில் இவர்கள் பணி புரியும்போது எது எந்தப்பக்கம் என்று புரியாமல் குழம்ப நிறைய வாய்ப்புகள் உண்டு. இவர்களுக்கும் இத்தகைய உணர்விகள் மூலம் கடலின் மேற்பரப்பு எந்தப்பக்கம் போன்ற சமிக்ஞைகளை தொடு உணர்வின் மூலம் மூளைக்கு சொல்ல முயற்சி நடந்து கொண்டு இருக்கிறது!
Neuro9
நாம் தன் உணர்வோடு (consciousness) யோசித்து செயல்படத்தேவை இல்லாமல் அன்கான்ஷியஸாக மூளை எவ்வளவோ பணிகளை நாள் முழுதும் செய்கிறதல்லவா, அந்த வகையில் இந்த புதிய திறன்களும் சேர்ந்து விடுகின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஒரு ஆய்வு சரளமாக இரண்டு மொழிகள் பேசுபவர்களுக்கு அல்சைமெர்ஸ் (Alzheimer’s) போன்ற மூளை சம்பந்தப்பட்ட வியாதிகள் வயதான காலத்தில் வந்தாலும் சுமார் ஐந்து வருடங்கள் தாமதமாக வருகின்றன என்று அறிவித்தது. இரண்டு மொழிகளை சரளமாக உபயோகிப்பது ஒரே மொழியை உபயோகிப்பவர்களுடன் ஒப்பிடும்போது, நம்மை அறியாமல் நாம் மூளைக்கு கொடுக்கும் உடற்பயிற்சிக்கு ஈடானது. அப்படி பயிற்சி பெரும் மூளை நீண்ட நாட்கள் நன்கு இயங்குவதில் ஆச்சரியமில்லை. பல மொழி பயிற்சியோ, பல திறன் பயிற்சியோ, வேறு புது விதமான சவால்களோ, எது வந்தாலும் சமாளித்து, கொஞ்ச காலத்தில் நிபுணத்துவம் பெற்று பணிசெய்ய மனித மூளை உற்சாகமாக காத்திருப்பது தெளிவாக தெரிகிறது.
நம் மூளையைப்பற்றிய நமது புரிதல் இன்னும் மேம்பட மேம்பட அதன் பல மூலைகளில் ஒளிந்திருக்கும் பல புதிய திறன்களைக்கண்டு நாமே வியந்து நிற்கப்போகிறோம்!
(முற்றும்)
படங்கள்: நன்றி விக்கிபீடியா மற்றும் பல வலைதளங்கள்

பழைய மூளைக்குள் சில புதிய மூலைகள் - 1

First published by Solvanam.com

Brain_See_Inside_Touch_Feel_1
கடந்த சில நூற்றாண்டுகளில் மருத்துவத்துறை எவ்வளவோ முன்னேறி இருந்தாலும் மனித மூளை எப்படி இயங்குகிறது என்பது இப்போதும் நமக்கு சரியாக புரியாத புதிர்தான்! நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் தலைக்குள் உட்கார்ந்திருக்கும் மூளை சுமாராக ஒன்றரை கிலோ எடையுள்ள ஒரு சாம்பல் நிற கொசகொசப்பு. மனித உடலுக்குள் இன்னும் முழுவதுமாக புரிந்து கொள்ளப்படாத வேறு பல விஷயங்கள் நிச்சயம் உண்டு எனினும், இதயம், சிறுநீரகம், கண் போன்ற முக்கியமான உறுப்புக்களை பற்றி நிறைய புரிந்து கொண்டு இருக்கிறோம், மாற்று அறுவை சிகிச்சைகள் செய்கிறோம், அதே பணிகளைப் பலவருடங்கள் சிறப்பாக செய்யக்கூடிய செயற்கை அவயங்களைக் கூடத் தயாரித்துச் சோர்ந்து போன இயற்கை அவயங்களை எடுத்துவிட்டு புதிய செயற்கை உதிரி பாகங்களைப் பொருத்துகிறோம். ஆனால் உடலின் மிக முக்கியமான ஒரு அவயமாக இருந்த போதிலும் மூளை மட்டும் இதற்கு விதிவிலக்கு.
ஐன்ஸ்டைனையும் சேர்த்து, ஆயிரக்கணக்கான இறந்துபோனவர்களின் மூளைகளை வெட்டிப்பார்த்து சோதனைகள் செய்தும், உயிரோடு இருக்கும் பலரை பல்வேறு நிலைகளில் எம்ஆர்ஐ (MRI: Magnetic Resonance Imaging) ஸ்கேன் செய்தும் பல்லாண்டுகளாக அதை முழுமையாக புரிந்து கொள்ள முயற்சிகள் விடாமல் நடந்து கொண்டு இருக்கின்றன. சென்ற பத்து நூற்றாண்டுகளைவிட கடந்த பத்து ஆண்டுகளில் மூளை எப்படி இயங்குகிறது என்பதைப்பற்றி நாம் நிறைய கற்றுக்கொண்டு இருக்கிறோம் என்பது உண்மைதான். இருந்தும், மூளையின் இந்தப்பகுதி இந்த பொறுப்பை ஏற்று செயல்படுகிறது போலிருக்கிறது என்ற ஒரு குத்துமதிப்பான புரிதலுக்குதான் இதுவரை வந்திருக்கிறோம். மூளை மாற்று அறுவை சிகிச்சையோ செயற்கை மூளை தயாரிப்போ நம் வாழ்நாட்களுக்குள் சாத்தியம் என்று தோன்றவில்லை. இந்தத்துறையைப்பற்றி சுவையான புத்தகங்கள்[1] எழுதியிருக்கும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த நரம்பியல் ஆய்வாளர் டாக்டர் வீ.எஸ்.ராமசந்திரன், இன்றைக்கும் ஒரு உயர்நிலை. பள்ளி மாணவன் சாதாரணமாக யோசித்து மூளையைப்பற்றி கேட்கும் கேள்விகளுக்கு கூட இத்துறை நிபுணர்களிடம் சரியான பதில்கள் இல்லை என்ற நிலை என்னை வசீகரித்து இத்துறை ஆய்வில் ஈடுபட உந்தியது என்று சொல்வார். அவருடைய விரிவுரைகளை யுட்யூப், டெட் (TED) முதலிய வலைத்தளங்களில் பார்த்து ரசிக்கலாம்.
Human_Brain_Neurons_Connections_Visual_Amygladaநான் என்கிற பிரக்ஞை நம் மூளைக்குள் எப்படி வருகிறது என்பது போன்ற தத்துவார்த்தமான சிக்கல் கேள்விகளை ஒதுக்கிவிட்டு பார்த்தாலும், சும்மா நம் காதில் விழும் ஒலி எப்படி மூளைக்கு சென்று சேர்ந்து புரிந்து கொள்ளப்படுகிறது என்பது போன்ற சற்றே எளிதான செயல்பாட்டுமுறை கேள்விகளுக்கு கூட மிகச்சரியான முழு விடைகள் இன்னும் கிடைக்கவில்லை. காதிலிருந்து மூளைக்கு ஒலி அலைகளை எடுத்துச்செல்லும் நரம்புகள் பழுது பட்டிருந்தால் காது சுத்தமாய் கேட்காமல் போய்விடும். எந்தவிதமான ஒலியையும் பிறந்ததிலிருந்து கேட்காதவர்கள் பேசவும் முடியாதல்லவா? எனவே 1950களில் இருந்து இந்தக்குறை உள்ளவர்களுக்கு காதுக்கு பக்கத்தில் சிறிய மைக் ஒன்றை பொறுத்தி, சுற்றுப்புறத்தில் கேட்கும் ஒலிகளை மின் அதிர்வுகளாக மாற்றி, அதை ஓயர் வழியே காதுக்குள் இருக்கும் காக்லியா என்ற இடத்திற்குள் செலுத்தி, அங்கிருந்து வழக்கமான பாதை வழியே மூளைக்கு அனுப்பி காது கேட்பது போல் செய்ய முடியுமா என்று முயன்று கொண்டு இருக்கிறார்கள். காக்லியர் இம்ப்ளாண்ட் (Cochlear Implant) என்று சொல்லப்படும் இந்த கருவிகள் மூன்று லட்சம் பேர்களுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டு இருக்கிறது. பல லட்ஷக்கணக்கில் பணம் தேவைப்படும் இத்தகைய விலையுயர்ந்த சிகிச்சைக்கு அப்புறம் கூட சிகிச்சை பெற்றவர்கள் காது கேட்கும் திறனை முழுவதும் பெறுவதில்லை. அதற்கு காரணம் வெவ்வேறு ஒலிகளை கேட்கும்போது இயற்கையாக எத்தகைய மின் அதிர்வுகள் நம் காதுக்குள் ஏற்படுகின்றன, அந்த அதிர்வுகள் மூளையால் எப்படி புரிந்து கொள்ளப்படுகிறது என்பதெல்லாம் நமக்கு இன்னும் சரியாக புரியாததுதான். இப்போதைக்கு ஒரு ஐம்பது சதவிகிதம் காது கேட்பதாக சொல்கிறார்கள். பூஜ்யத்தில் இருந்து ஆரம்பிக்கும்போது ஐம்பது சதவிகிதம் நல்ல முன்னேற்றம்தான்.
Cochlear_Implant_Hearing_Nerve_Sound_Processor_Brain_Sounds_Internals
இதே உத்திகளை பயன்படுத்தி பிறவியிலிருந்தே கண் பார்வை இல்லாதவர்களுக்கு முடிந்த அளவு பார்வைத்திறனைத்தரும் முயற்சியும், நடந்து கொண்டு இருக்கிறது[2]. கண் பார்வை இல்லாதவர்களுக்கு ஒரு கண்ணாடி போன்ற கருவியை கொடுத்து அணிந்துகொள்ளச்சொல்லி அதில் சிறிய காமெராக்களைப்பொறுத்தி, எதிரே உள்ள காட்சிகளுக்கேற்ப மின் அதிர்வுகளை உருவாக்கி அவற்றை கண்களுக்கு பின்புறம் உள்ள நரம்புகள் வழியாக மூளைக்குள் செலுத்தி எவ்வளவு தூரம் மூளைக்கு படம் காட்ட முடியும் என்று ஆய்ந்து கொண்டு இருக்கிறார்கள்.  பத்து இருபது வருடங்களாக நடந்துவரும் இம் முயற்சிகளின் மூலம் இப்போதைக்கு நிழல், புள்ளி என்பதுபோல் ஏதோ பஜ்ஜென்று தெரிய வைத்து கரகோஷம் பெற்றிருக்கிறார்கள். இந்த மாதிரியான ஆராய்ச்சியைப் பற்றி அடுத்த இதழில் இன்னும் கொஞ்சம் பார்ப்போம்.
இதெல்லாம் மிகவும் கடினமான சிறிய முன்னேற்றங்கள் அதுவும் மனம் தளரவைக்கும் வேகத்தில் நடப்பவை போல் தெரிகிறதே என்று எண்ணினீர்களானால், அங்கேதான் கதை மாறுகிறது! இந்த ஆய்வுகளில் நமக்கு உற்சாகம் அளிக்கும் விஷயம் என்னவென்றால், இணைப்பு விட்டுப்போன இந்த நரம்புகளுக்கு செயற்கையாய் ஒட்டுப்போட்டு ஏதோ நமக்கு தெரிந்த வரையில் மின் அதிர்வுகளை சுமாராக ஏற்படுத்தி மூளைக்கு அனுப்பி வைத்தோமானால், நமது அசகாய மூளை உள்ளே வரும் அரைகுறை சமிக்ஞைகளை (Signals) வாங்கி தானே அதை எப்படி அலசி புரிந்து கொள்ளவேண்டும் என்று கற்றுக்கொண்டு விரைவில் நன்கு செயல்பட ஆரம்பித்து விடுகிறது! கொஞ்சம் யோசித்தால் எனக்கு பச்சை நிறம் ஏற்படுத்தும் மூளை சலனங்களை உங்களுக்கு சிவப்பு நிறமும், உங்களுக்கு பச்சை நிறம் ஏற்படுத்தும் மூளை சலனங்களை எனக்கு மஞ்சள் நிறமும் ஏற்படுத்தலாம் என்பது நமக்கு புரியும். நானும் நீங்களும் பிறந்ததில் இருந்து ஒவ்வொரு வண்ணமும் நமது மூளைக்குள் ஏற்படுத்தும் சலனங்களுக்கு பழக்கப்பட்டவர்கள் என்பதால், இந்த வித்யாசங்களால் எந்த பாதகமும் இல்லாமல் ட்ராஃபிக் விளக்குகளை ஒரே மாதிரி புரிந்துகொண்டு வண்டி ஓட்ட முடிகிறது. அது போல பிறவியிலிருந்தே காது கேட்காதவர்களும், கண் தெரியாதவர்களும், ஒவ்வொரு ஒலி, ஒளிக்கேற்ப ஒரு சமிக்ஞை உள்ளே வர ஆரம்பித்தால், அதைக்கற்றும் புரிந்தும் கொண்டும் இயங்க ஆரம்பித்து .விடுகிறார்கள். பிறவியிலிருந்தே அந்த புலன்கள் ஒழுங்காக வேலை செய்பவர்களுக்கு உள்ளே வரும் சமிக்ஞைகளில் இருந்து, நாம் உருவாக்கி உள்ளே செலுத்தும் இந்த செயற்கை சமிக்ஞைகள் சற்று வேறுபட்டாலும் ஊனமுற்றவர்களின் மூளைக்கு அவை புதிய சமிக்ஞைகள் என்பதால் அவர்களுக்கு அவை பழகிவிடுகின்றன. குறிப்பிட்ட (ஒலி அல்லது) ஒளிக்கான சமிக்ஞை கண்டபடி நாளுக்கு நாள் மாறினால் மட்டுமே குழப்பம். இப்படி வளைந்து கொடுத்து புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் மூளையின் கில்லாடி திறனுக்கு நியூரோப்ளாஸ்டிசிடி (Neuroplasticity) என்று பெயர்.
Brain_Cartoons_Comics_Graphics_Weight_Lifting_Hands_Strength_Training_Activityகை கால்களை இழந்தவர்களுக்கு, செயற்கை கை கால்களை பொறுத்திக்கொடுத்து அவர்களை முடிந்த அளவு நேர்ப்படுத்துவதுபோல், ஐம்புலன்களில் ஏதாவதொன்றை பிறவியிலேயோ அல்லது வாழ்வின் இடையிலோ இழந்தவர்களுக்கு செயற்கை உபகரணங்களை (Prosthesis) பொறுத்தி அந்த திறனை திரும்ப பெற்று தருவது மருத்துவத்துறையின் வெகுநாளைய போராட்டம். இந்தத்தேடல் அல்லது தேவை எல்லோருக்கும் எளிதாகப்புரியும் விஷயம். ஆனால் அந்த முயற்சியின் வழியாக நாம் பெற்றிருக்கும் அனுபவத்தைக்கொண்டு, நரம்பியல், மூளை முதலியவற்றை பற்றிய சம்பிரதாயமான ஆய்வுகளைத்தாண்டி, இதுவரை மனிதர்களுக்கு முற்றிலும் அறிமுகம் இல்லாத புதிய புலன்களை அமைத்துக்கொடுத்து புதிய திறன்களை மனித மூளைக்கு கொடுக்க முடியுமா என்பது எளிதாக எல்லோருக்கும் தோன்றாத ஒரு புத்திசாலித்தனமான கேள்வி.
பீட்டர் கியோனிக் (Dr Peter König) இந்தக்கேள்வியில் ஈடுபாடு கொண்ட ஒரு ஜெர்மன் பல்கலைக்கழக பேராசிரியர்/ஆய்வாளர். இதற்கு பதில் சொல்லும் முயற்சியில் ஈடுபட்ட அவர், ஒரு டஜன் குட்டி மோட்டார்களை எடுத்து ஒரு பட்டை பெல்ட்டில் ஒட்டினார். ஒவ்வொரு மோட்டாரும் பதினைந்து வருடங்களுக்கு முன் உபயோகத்தில் இருந்த பேஜர்களைப்போன்றவை. இவற்றோடு பெல்ட்டில் ஒரு சிறிய GPS கருவி மற்றும் பேட்டரி. பெல்ட்டைக்கட்டிக்கொண்டு ஸிவிட்சை தட்டிவிட்டால் அந்த பன்னிரண்டு மோட்டார்களில் எந்த மோட்டார் வடக்குபுறம் இருக்கிறதோ அது மட்டும் விடாமல் செல்போன் அதிர்வதுபோல் அதிர்ந்து கொண்டே இருக்கும். அதாவது, பெல்ட்டைக்கட்டிக்கொண்டு வடக்கு திசையை நோக்கி நின்றீர்களானால், உங்கள் தொப்பிளுக்கு நேரே உள்ள மோட்டார் அதிரும். இப்போது மெதுவாக ஒரு அரைச்சுற்று சுற்றி தெற்கு நோக்கி நின்றீர்களானால், உங்கள் முதுகில் உள்ள மோட்டார் அதிரும். இன்னொரு கால்சுற்று சுற்றி மேற்கு நோக்கி நின்றீர்களானால், உங்கள் வலது கைக்கு அருகே உள்ள மோட்டார் அதிரும். ஃபீல் ஸ்பேஸ் (Feel Space) என்று பெயரிடப்பட்ட இந்த பெல்ட்டின் படங்களைப்பார்த்தால், நான் சொல்ல முனைவது சுலபமாகப்புரிந்துவிடும்.
Vibration_Motor_Sensor_Feel_Space_Wrist_Hand_Brain_GPS_Direction_Instruments_Mechanics_Brain
இந்த பரிசோதனையில் பங்கெடுத்துக்கொண்டவர்கள் ஒரு இரண்டு மாதங்கள் இந்த பெல்ட்டை நாள் பூராவும் அணிந்திருந்தார்கள். ஆரம்பித்த முதல் சில மணிநேரங்கள் விடாமல் இடுப்பில் ஏதோ ஒரு பக்கம் இந்த மெல்லிய அதிர்வு இருந்து கொண்டே இருந்தது வினோதமான நச்சரிப்பாகத்தோன்றினாலும், ஒரே நாளில் இடைவிடாத அந்த அதிர்வு மிகவும் பழகிப்போய் விட்டதாம். மறுநாள் வீட்டிலிருந்து கல்லூரிக்கு சைக்கிள் ஓட்டிக்கொண்டு வரும்போது, ஒவ்வொரு திருப்பத்திலும் இடுப்பில் அதிர்வு ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு பூச்சி மாதிரி ஓடி, வடக்கு எந்தப்பக்கம் என்று விடாமல் நினைவுறுத்திக்கொண்டே இருந்தது. மொத்தத்தில் இந்த பெல்ட் அணிந்தவர்களின் மூளைக்கு அந்த இடைவிடாத மெல்லிய இடுப்பு அதிர்வு மூலம் வடதிசை எந்தப்புறம் என்று எப்போதும் தெரிந்து இருந்தது. அந்தத்தகவல் அவர்களுக்கு அந்த கணம் தேவையோ இல்லையோ, கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறார்களோ, திறந்து வைத்திருக்கிறார்களோ, இரவோ பகலோ, கட்டிடங்களுக்கு உள்ளே இருக்கிறார்களோ அல்லது வெளியே சுற்றிக்கொண்டு இருக்கிறார்களோ, உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்களோ அல்லது சைக்கிள், கார், ரயில் எதிலும் பயணித்துக்கொண்டு இருக்கிறார்களோ கவலை இல்லை. வடக்கு திசை எந்தப்புறம் என்ற தகவல் நாள் பூராவும் அவர்களின் மூளைக்குள் விடாமல் சென்று கொண்டே இருந்தது. இது இவர்களுக்கு ஸ்பெஷலாக வழங்கப்பட்ட, சில இடம் பெயரும் பறவைகளுக்கு இருப்பதைப்போன்ற, ஒரு புதிய புலன்!
இரண்டு மூன்று நாட்களுக்குள் இந்த இடுப்பு உறுத்தல் மிகவும் பழகிப்போய் ஏறக்குறைய மறந்தே போய்விட்டாலும், காரில் பயணிக்கும்போது தன்னையறியாமல் சாலை எவ்வளவு வளைந்து வளைந்து போகிறது என்பது அவர்களுக்கு உறைக்க ஆரம்பித்தது! வீட்டில் சும்மா டி‌வி பார்க்கும்போது என் ஆஃபிஸ் இருப்பது அந்தப்பக்கம் என்று மிகச்சரியான திசையை நோக்கி ஓர் எண்ணம் தோன்ற ஆரம்பித்தது! இரண்டு வாரங்களுக்குப்பின் புதிய ஊர்களுக்கு போனாலும்கூட ஊரின் மேப் மூளைக்குள் தானாகவே உருவாக ஆரம்பித்து, என்னை எங்கே கொண்டுபோய் விட்டாலும் நான் நிச்சயம் தொலைந்து போகவே மாட்டேன் என்ற அசாத்திய தன்னம்பிக்கை வந்து விட்டதாம்! முஸ்லீம்கள் தினமும் ஐந்து முறை தொழுகை செய்யும்போது மெக்காவை நோக்கி தொழும் வழக்கம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். எந்த ஊரில் எந்த அறைக்குள் இருந்தாலும், மெக்கா எந்தப்பக்கம் என்று இந்த ஃபீல் ஸ்பேஸ் பெல்ட்காரர்களால் சுலபமாக சுட்டிக்காட்ட முடிந்திருக்கும்! திசை என்ற தலைப்பில் சொல்வனத்திலேயே ஒரு கட்டுரை  எழுதிய சுகா கூட இந்த முயற்சியைப்பற்றி கேள்விப்பட்டால் சந்தோஷப்படுவார்.  இப்படியாக இரண்டு மாதங்கள் கழிந்தபின் பேராசிரியர் பீட்டர் கியோனிக், சரி பரிசோதனை முடிந்தது, பெல்ட்டைக்கொடுங்கள் என்று திரும்ப வாங்கிக்கொண்டார். அவ்வளவுதான், பங்கெடுத்துக்கொண்ட அனைவருக்கும் ஏதோ ஒரு பழகிய திறனை திடீரென்று இழந்தாற்ப்போல் ஒரு மனம் கலங்கிய நிலை, மனச்சோர்வு, குழப்பம்! இதெல்லாம் விலகி பழைய நிலைமை திரும்ப ஒரு வாரம் ஆகியது!
இந்த அழகான சோதனையிலிருந்து தெளிவாகப்புரிவது எப்படியாவது விஷயங்களை சேகரித்து மூளைக்கு அனுப்பி வைத்தால் அதுவாகவே வெகு விரைவில் அந்த தகவல்களைப்படித்து புரிந்து கொண்டு உபயோகிக்க ஆரம்பித்துவிடும் என்பதுதான். இந்த அற்புதமான திறன் நமக்கு நன்கு புரிந்த ஐம்புலன்களை இன்னும் செம்மைப்படுத்த (உதாரணமாக நமக்கு எப்போதும் இருக்கும் சாதாரண மோப்ப சக்தியை ஒரு நாயின் மோப்ப சக்தியின் அளவுக்கு உயர்த்துவது) மட்டும் இல்லாமல், நமக்கு இதுவரை இல்லவே இல்லாத புதிய புலன்களை பெறவும் சாத்தியக்கூறுகள் உள்ளதை நிரூபிக்கிறது.
இந்தக்கொள்கையின்படி நிலநடுக்கம் வருவதையோ, டால்ஃபின் அல்லது வௌவால் அல்ட்ராசோனிக் அதிர்வெண்களில் (Frequency) ஒலியெழுப்புவதையோ நாம் உணரவேண்டுமெனில், அதற்கு தகுந்த உணர்விகளை (sensor) உபயோகித்து, நமக்கு புரியும் ஐம்புலன்களில் ஒன்றுக்கு எட்டும்படியான சமிக்ஞையாக மாற்றி மூளைக்குள் செலுத்திவிட்டால் போதும். அதற்கப்புறம் மூளை பார்த்துக்கொள்ளும்!
(தொடரும்)
சான்றாதாரங்கள்
1. V. S. Ramachandran “A Brief Tour of Human Consciousness: From Imposter Poodles to Purple Numbers”, Pi Press, New York, 2004.

Thursday, May 22, 2014

Book Review: The $10 Trillion Prize

I wanted to get a better sense of the fast growing Chinese and Indian economies both qualitatively and quantitatively. So, looked for books that covered both micro and macro economic perspectives and bought this one titled "The $10 Trillion Prize: Captivating the Newly Affluent in China and India" from Amazon. Five individuals are listed as authors. The first four are partners in a firm called Boston Consulting Group that is a marketing consultant company working with Western companies that are trying to break into these two markets. Looks like the last one, Simon Targett, is the actual writer, who also seems to have joined this BCG now as Editor in Chief from his previous post as Financial Times editor. 

The title designed to grab attention refers to the size of the combined consumer market in China and India by the year 2020. China's market is estimated to be ~$6.2 trillion and India's ~$3.6 trillion. First part of the book talks about the on-going and forth coming raise of the new middle class in that continent that will fuel the consumer demand in addition to the new super-rich billionaires as well as the "left behind" one billion poor people who still need products and services, though priced at the lower end of the spectrum. Second part analyzes individual product segments such as food & drink, real estate/house, luxury goods, digital products and education. Authors do a decent job of addressing each area providing exactly 50/50 coverage to Chinese & Indian markets. Their analysis is generally correct. For example, they classify Indian rich consumers into three categories. First are the ones that inherited a lot of money and so were always rich. They like flaunting their wealth with expensive cars, clothes, hiring an army of servants, and so forth. Second is the highly educated professionals that came from lower middle class families but worked their butts off to reach their current level. They don't like to flaunt their wealth but will spend a lot on their kids' education or buying a nice home to house their family. Third kind are the ones who are not necessarily highly educated but started a business at the right time and became rich raising with the tide. For them having an expensive car or other such luxury items is a statement saying they have arrived and should be taken seriously. Good categorization indeed. But not sure if such an understanding is new/unusual that the authors have developed.

Third part of the book is titled Lessons for Business Leaders and talks about consumer mentality (they seek value for money in cheap as well as expensive goods/services), how West induced changes in China/India affects the West back both positively and negatively and how hungry, ambitious and driven entrepreneurs in those two countries are.

On the whole book sounds too pedantic, repeatedly emphasizing that the authors are the experts in the field and will tell you what to do to succeed in this market. Despite that tone, I didn't find any new meta-level ideas. Most of the book reads like newspaper reporting that spits out stats, tables and charts linking them via disconnected sentences describing those numbers. Several chapters have action items for business leaders entering this market to take up. But the AIs are vague and simple, such as understand your consumer's needs, put your best people on the job, work patiently for years, etc. There are a lot of personal anecdotes interspersed that shows how hard people in those two countries work and how ambitious they are. Since these consultants are bullish on that region, they are waxing eloquently about people burning themselves up to grow their personal wealth & business. But I am not sure that is the best way forward for the entire world. This book might be a useful to handout to their potential customers who have no clue about India/China and seek out BCG as consultants. It will probably help establish them as domain experts to tease out new business. But perhaps simply by being a sentinel being, I am aware of what is going on in that part of the world. So, personally I felt the kind of unusual new insights I look for in books is totally missing in this one.

I think you can skip the book and look at this PDF to get all the contents in few mins:http://documents.bcg.com/BCG_10_Trillion_Dollar_Prize_Executive_Summary_Booklet_2012.pdf
One amusing thing to note is the Amazon customer reviews (about 20) posted for this book, which seems to be mostly self/friends/family generated. :-)
-sundar.

Wednesday, May 21, 2014

தொடர்பாடல் செயலிகளின் பரிணாம வளர்ச்சி – 4

First published at Solvanam.com on May 19, 2014

World_Internet_WWW_Keyboard_Sundar_Vethantham_Bits_Bytes_Technology_IT_Computers

ஒரு சின்னக்கிளை அலுவலகம்

பிணையசெயலிகளில் ஒரு குட்டி பொதுநோக்கு செயலியையும் போனஸ்ஸாக போட்டு கொடுத்தார்கள் என்று பார்த்தோமல்லவா? தபால் நிலையப்பணியாளரைப்போல திசைவியை முடுக்கி விடவும் அவ்வப்போது சிறுசிறு வேலைகள் செய்யவும் சேர்க்கப்பட்ட அந்த பொதுநோக்கு செயலி விரைவிலேயே பல்வேறு விதமான வேலைகள் கொடுக்கப்பட்டு திணற ஆரம்பித்தது. ஒரு அலுவலக பிணைய நுழைவாயிலாக இருப்பது அப்படிப்பட்ட ஒரு திணறவைக்கும் வேலை. கீழே உள்ள படத்தில் ஒரு ஐம்பது பேர் வேலை செய்யும் கிளை அலுவலகம் ஒன்றை காட்டியிருக்கிறோம். இடது பக்கத்தில் இருக்கும் மேகம் பொது இணையத்தை குறிக்க வலதுபுறம் உள்ளது அலுவலகத்துக்குள் இருக்கும் பாதுகாப்பான பிணையம் (Protected Network) என்று கொள்ளலாம். அலுவலகத்துக்குள் நுழையும் வெளியேறும் எல்லா பொட்டலங்களும் நுழைவாயில் என்று குறிக்கப்பட்டிருக்கும் திசைவியை கடந்துதான் சென்றாக வேண்டும். இந்தப்பெட்டி அந்த அலுவலகத்துக்ககாக என்னென்ன சேவைகள் செய்கிறது என்று சுருக்கமாக பார்க்கலாம்.
Firewall_wifi_Internet_Connection_Safe_Browsing_Explained_Router_security_Hackers_Telephony
1. அந்த அலுவலகத்துக்குள் இருக்கும் ஐம்பது கணிணிகளை இணையத்திலிருந்து மறைத்து ஒரே கணிணி போல ப்ராக்ஸி கொடுப்பது. இப்படிச்செய்வதால் இணையத்திலிருந்து தபால் பொட்டலங்கள் வந்து சேர ஒரு அலுவலகத்துக்கு ஒரு இணைய முகவரி இருந்தால் போதும். ஒரு வீட்டில் பலர் வசித்தாலும், வீட்டுக்கு என்று ஒரே முகவரியை உபயோகித்துக்கொண்டு வரும் கடிதங்களை பெயரை பார்த்து அவரவர் எடுத்துக்கொள்வது போல, அலுவலகத்துக்குள் இருக்கும் எல்லா கணிணிகளையும் இந்தபெட்டி அறிந்துகொண்டு வெளியுலகத்துடன் தான் மட்டும் பேசி, வந்து சேரும் பொட்டலங்களை சரியான கணிணிக்கு அனுப்பி விடுகிறது. இது ஒரு முக்கியமான வேலை. இப்படிச்செய்வதால்தான் IPv4 முகவரிகள் தீர்ந்து போய் முழிக்காமல் இன்னும் சமாளித்துக்கொண்டு இருக்கிறோம்.
2. தலைமை அலுவலகம் அல்லது வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களின் கணிணிகளில் இருந்து வரும் மறையாக்கப்பட்ட பொட்டலங்களை மறை விலக்கம் செய்வது. எதிர் திசையில் அவர்களுக்கு இந்த அலுவலகதில் இருந்து போகும் பொட்டலங்களை மறையாக்கம் செய்வது.
3. இந்த கிளை அலுவலகத்தில் இருந்து ஆரம்பிக்கும் தொலைபேசி அழைப்புகளை அமைத்துக்கொடுப்பது. வெளியிலிருந்து உள்ளே வரும் தொலைபேசி அழைப்புகளை சரியான ஆளுக்கு இணைத்துக்கொடுப்பது.
4. உள்ளே வரும் பொட்டலங்களில் வைரஸ் ஏதும் உள்ளதா என்று சோதிப்பது. பணியாளர்களுக்கு வந்து சேரும் ஸ்பாம் மின்னஞ்சல்களை அடையாளம் கண்டுபிடித்து தடுப்பது.
5. நேரத்திற்கு ஏற்றாற்போல் சில பல இணையத்தளங்களை அணுகவிடாமல் பணியாளர்களைத்தடுப்பது (ஆபாச இணையதளங்களுக்கு எப்போதும் தடை, யூட்யூப் தளத்திற்கு வேலைநேரத்தில் தடை)
இந்த மாதிரியான பல வேலைகளை அது செய்யவேண்டி இருப்பதால், தேவையான அளவு திறன் இல்லாத ஒரு பெட்டியை விலை குறைவாக இருக்கிறது என்று பணிக்கு அமர்த்தினால் கிளை அலுவலக வேலை மிகவும் பாதிக்கப்படும்.

சில்லுக்குள் ஓர் சிற்றுலகம்

திரும்பத்திரும்ப இந்தக்கட்டுரை தொடரில் சொல்லி வந்தது போல், பொது நோக்குச்செயலிகள் விளையாட வரும்போது தபால் ஆஃபிஸ் பணியாளரைப்போல அந்த செயலியை வைத்துக்கொண்டு பல்வேறு வகையான காரியங்களை செய்து கொள்ள முடிகிறது. ஆனால் வேகம்உதைக்கிறது. ஏஸிக் சில்லுகளை உபயோகித்தால் எக்கச்சக்க வேகம் கிடைக்கிறது ஆனால் அவை என்னென்ன வேலைகளைச்செய்ய முடியும் என்கிற பட்டியல் மிகவும் சிறிதாகி விடுகிறது. நமக்கென்னவோ கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை. மற்ற துறைகளில் இது போன்ற சிக்கல்கள் வரும்போது இரண்டு இலக்குகளையும் சேர்த்து அடையும் தீர்வுகளை கண்டு பிடிப்பது மிகவும் கடினம். எனவே இரண்டு இலக்குகளில் ஒன்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துகொண்டு இரண்டாவது இலக்கை ஓரமாக தள்ளிவிட்டு போக வேண்டியிருக்கும். ஆனால் மின்னணுவியலில் மட்டும் கொஞ்ச நாட்கள் காத்திருந்தால் போதும், சென்ற இதழில் நாம் பார்த்த மூரின் விதி .(Moore’s Law) நமக்கு கை கொடுக்க வந்துவிடும்!
கட்டுரைத்தொடரின் ஆரம்பத்தில் இன்டெல் நிறுவனத்தின் பெண்டியம் பொது நோக்கு செயலியை பற்றி பேசினோம் அல்லவா? அப்போதெல்லாம் ஒரு சில்லு வாங்கினால் அதனுள் ஒரு பெண்டியம் செயலி மட்டும்தான் இருக்கும். இப்போதெல்லாம் இந்தத்துறை எக்கச்சக்கமாய் முன்னேறி இருப்பதால், இன்டெல் நிறுவனமே ஒரே சில்லுக்குள் இரண்டு நான்கு, எட்டு என்று பல பொதுநோக்கு செயலிகளை ஒரு ICக்குள் அடைத்து விற்கிறார்கள். இதனால் பொதுநோக்கு செயலிகளின் செயலாக்கத்திறன் அதிகரிக்கிறது.
Intel_Core_2_Two_Duo_Chips_IC
அதையும் தாண்டி, கடந்த சில வருடங்களாக எஸ்ஓசி (SoC – System On a Chip) என்று அழைக்கப்படும் இன்னும் புதிய சில்லுகள் வந்து கொண்டு இருக்கின்றன. இந்த சில்லுகள் ஒரு திசைவியோ கணிணியோ அல்லது வேறு எதுவுமோ செய்ய தேவையான அத்தனை பாகங்களையும் ஒரே ICக்குள் திணித்து வைத்துக்கொண்டு வருகின்றன. இதற்கு உதாரணமாக எல்எஸ்ஐ என்ற கம்பெனி சில மாதங்களுக்கு முன்னால் அறிமுகப்படுத்திய AXM5516 என்கிற ஒரு சில்லைப்பற்றி மட்டும் பார்ப்போம்.
இப்போது இண்டெல்லுக்கு போட்டியாக ARM என்ற நிறுவனம் வித்தியாசமான முறையில் வளர்ந்து கொண்டு இருக்கிறது. ARM நிறுவனமும் பொதுநோக்கு செயலிகளை வடிவமைத்தாலும், அவர்கள் தாங்களாகவே IC எதுவும் செய்து வீற்பதில்லை. அதற்கு பதில் தாங்கள் வடிவமைத்த செயலியை எல்‌எஸ்‌ஐ போன்ற கூட்டாளி நிறுவனங்களுக்கு அவர்கள் தயாரிக்கும் சில்லுகளுக்குள் உபயோகித்துக்கொள்ள உரிமை வழங்கி விடுகிறார்கள். எல்‌எஸ்‌ஐ சில்லுகள் விற்கும்போது லாபத்தில் ARMக்கு ஒரு சின்ன சதவிகிதம் பங்கு! ARMன் செயலிகள் குறைந்த மின்சக்தியில் இயங்குவதில் பேர் பெற்றவை என்பதால் பேட்டரி திறன் பற்றிய கவலை எப்போதும் நிலவும் கைபேசிகளில் இந்த செயலிகளை உபயோகிக்க ஆரம்பித்தார்கள். இந்த வியாபாரமுறை .இப்போது மிகவும் பிரபலமாகி, இண்டெல்லை தூக்கி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறது! டஜன் கணக்கில் ARMக்கு கூட்டாளி நிறுவனங்கள் இருப்பதாலும், இப்போது பட்டை கிளப்பிக்கொண்டு இருக்கும் சாம்சங், ஆப்பிள் போன்ற நிறுவனங்களின் செல்ஃபோன்களிலும் பலகை கணிணிகளிலும் இந்த செயலிகள் இருப்பதால் ஒரு நாளுக்கு ஒரு கோடி என்ற அளவில் ARM செயலிகள் விற்பதாக சொல்கிறார்கள்! எனவே மொபைல் பக்கம் போனால் சந்தையில் ARMன் பங்கு 90 சதவிகிததிற்கு மேல்! ஆனால் இவர்கள் தாங்களே சில்லுகளாக செய்து விற்காமல் வெறும் ராயல்டி மட்டுமே பெறுவதால் வருவாயை பொறுத்தவரை இன்டெல் என்ற 400 கோடி டாலர் யானைக்கு முன்னே 8 கோடி டாலர் சுண்டெலியாகத்தான் இருக்கிறார்கள். பல முறை முயன்றும் யானையால் சுண்டெலியை இதுவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போதைக்கு சுண்டெலிதான் சிரித்துக்கொண்டு இருக்கிறது!
Coherent_Memory_Interconnect_Virtual_Pipeline_Transfer_Controllers_Network_Memory
மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டு இருப்பது எல்‌எஸ்‌ஐயின் AXM5516 ICயின் உள்கட்டமைப்பு. இப்போதைக்கு உலகிலேயே திறன்மிகக்கொண்ட ஒரு செயலியாக இது படைக்கப்பட்டு இருக்கிறது. ஒன்று, இரண்டு, நான்கு எல்லாம் போய், இந்த செயலிக்குள் பதினாறு ARM பொதுநோக்கு செயலிகள் உட்கார வைக்கப்பட்டு இருக்கின்றன.
வரும் பொட்டலங்களை விலாசம் பார்த்து பிரிக்கும் திறன் மேற்கண்ட படத்தில் Modular Packet Processor என்ற ஒரு கட்டத்துக்குள் அடங்கி விட்டது! அதற்கப்புறம் நாம் முன்சொன்ன போக்குவரத்தை கட்டுப்படுத்தும் திறனுக்கு ஒரு இஞ்ஜின், பொட்டல விலாசங்களை மாற்றி எழுத ஒரு இஞ்ஜின், சின்னச்சின்ன பொட்டலங்களை சேர்த்து பெரிய ஒரு பொட்டலம் கட்டுவது அல்லது பெரிய ஒரு பொட்டலத்தை உடைத்து பல சிறிய பொட்டலங்களை உருவாக்குவது போன்ற விஷயங்களை செய்ய ஒரு இஞ்ஜின், வரும் பொட்டலங்கள் வழியில் ஏதும் கறை படியாமல் சுத்தமாக வந்து சேர்ந்ததா என்று தரக்கட்டுப்பாடு செய்ய ஒரு இஞ்ஜின், மறையாக்கம்/விலக்கம் செய்ய ஒரு இஞ்ஜின், வைரஸ் ஏதும் உள்ளதா என்று பரிசோதிக்க ஒரு இஞ்ஜின் என்று ஒரு டஜன் இஞ்ஜின்களை அழகாக கட்டம் போட்டு இந்த ஒரு ICக்குள் உட்கார்த்தி வைத்திருக்கிறார்கள். அதற்கு மேல் இந்தக்காலத்தில் பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த USBயிலிருந்து ஆரம்பித்து, புத்தம்புதிய பல இணைப்புமுறைகளை பயன்படுத்தி பிற பெட்டிகளுடன் பேசவும் இதில் திறணமைக்கப்பட்டு இருக்கிறது. ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய “மின்-குற்றங்களைத்தடுக்கும் பிணையச்செயலிகள்” என்ற ஒரு கட்டுரையில் [3], இணையப்பாதுகாப்பிற்கு இத்தகைய ஒருங்கிணைவு மிகவும் உதவும் எனவே இதைச்செய்தே ஆக வேண்டும் என்று எழுதி இருந்தேன். அது ஒன்றும் பெரிய தீர்கதரிசனம் ஒன்றும் இல்லை என்றாலும் அந்த கனவு நனவானது மனதுக்கு இதமளிக்கும் விஷயம்.

மெய்நிகர் குழாய்வழியமைப்பு

மேற்ச்சொன்ன விஷயங்கள் எல்லாம் போதாதென்று “மெய்நிகர் குழாய்வழியமைப்பு” (Virtual Pipeline Technology) என்றொரு புதிய தொழில்நுட்பம் வேறு இதில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. நமது நாவைச்சுழல வைக்கும் இது என்ன மாதிரி தொழில் நுட்பம் என்று கொஞ்சம் பார்த்து விடுவோம்.
ஒரு கிளை அலுவலகத்தை பற்றி பேசிக்கொண்டு இருந்தோம் இல்லையா? அந்த நுழைவாயில் திசைவியினுள் வந்துபோகும் பொட்டலங்களின் செயலாக்கத்தேவைகள் நான்கு விதமாக இருக்கலாம்.
1. வெளியுலகத்தில் இருந்து உள்ளே வரும் பொட்டலங்களை முதலில் வைரஸ் செக் செய்யும் இடத்துக்கு அனுப்பி, அங்கிருந்து பச்சை விளக்கு வந்தால், பொட்டலத்தலைப்பில் கிளைக்குள் அது எந்த கணிணிக்கு போய்ச்சேர வேண்டுமோ அந்த விலாசத்தை எழுதி அனுப்ப வேண்டும்.
2. வெளியுலகத்தில் இருந்து உள்ளே வரும் இன்னொரு பொட்டலம் அன்று வீட்டிலிருந்து வேலை செய்யும் ஒரு பணியாளரிடமிருந்து வந்திருந்தால், முதலில் அதை மறைவிலக்கம் செய்து, அதன் பின் வைரஸ் ஸ்கேன் செய்து, பின் விலாசம் மாற்றி உள்ளே அனுப்ப வேண்டும்.
3. கிளைக்குள் ஒரு கணிணி காலையில் முடுக்கி விடப்படும்போது, அது விழித்தெழுந்து ஹலோ நான் எழுந்து விட்டேன் என்று சொல்ல விழையும்போது அத்தகைய அறிவிப்புகளை ஏற்று வரும் பொட்டலங்களை பொதுநோக்கு செயலிக்கு அனுப்பி அங்கு ஓடும் நிரலிகளை உபயோகித்து அந்த கணிணி விழித்தெழுந்து பிணையத்துடன் இணைந்திருக்கிறது என்று குறித்துக்கொள்ள வேண்டும்.
4. கிளைக்குள் இருப்பவர்கள் இணையத்தை மேய முற்படும்போது, வரும் பொட்டலங்களை மறையாக்கம் செய்யாமல், நேர இணையத்துக்கு அனுப்ப வேண்டும். இது அலுவலகத்துக்குள் இருந்து புறப்பட்ட பொட்டலம் என்பதால் வெளியே அனுப்பும்போது வைரஸ் ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.
இப்படியாக SoCக்குள் குறுக்கும் நெடுக்குமாக பல பாதைகளில் பொட்டலங்கள் பயணிக்க வேண்டிய அவசியம் உண்டு. வெறும் பொதுநோக்கு செயலிகளில் உள்ளேவரும் அல்லது வெளியே போகும் எல்லா பொட்டலங்களும் செயலி வழியாகத்தான் வந்து போயாக வேண்டும். உதாரணமாக, அந்தக்காலத்து இண்டெல் x386 பொதுநோக்கு செயலிக்கு x387 என்றொரு இணைச்செயலி (Coprocessor) உண்டு. அந்த இணைச்செயலி x386 செயலி நிறைய கணித சமன்பாடுகளை சமாளிக்க வேண்டிய தேவை வந்து தடுமாறும்போது மட்டும் அதற்கு கணக்குப்பிள்ளையாக இருந்து உதவுவதற்காகவே உருவாக்கப்பட்டது. கணிதத்தேவை அதிகம் இல்லாத பொட்டலங்கள் படத்தில் காட்டப்பட்டுள்ள நீலப்பாதையில் x386க்குள் வந்து, அந்த செயலிக்குள்ளேயே கையாளப்பட்டு திருப்பி அனுப்பப்படும். கணிதத்தேவை அதிகம் உள்ள பொட்டலங்கள் படத்தில் காட்டப்பட்டுள்ள சிவப்புப்பாதையில் x386க்குள் வந்து, அந்த செயலியால் தேவைக்கேற்ப கணக்குப்பிள்ளையிடம் அனுப்பப்பட்டு, திரும்ப x386ல் பெறப்பட்டு அதன்பின் வெளியே அனுப்பிவைக்கப்படும்.
Intel_Chips_Communications_386_Data_Transfer
வரும் பொட்டலங்கள் எதுவும் நேராக கணக்குபிள்ளையிடம் சென்று பேசிவிட முடியாது. இந்த அமைப்பின் மூலம் x386 பொதுநோக்கு செயலிக்கு கொஞ்சம் உதவி கிடைத்தாலும், எல்லா பொட்டலங்களும் x386 வழியாகத்தான் வந்துபோக வேண்டும் என்ற கட்டாயம் உண்டு. அந்தக்கட்டாயம் பொதுநோக்கு செயலியை திணற அடிக்கும் என்பதால். அந்தத்திணறலை தவிர்க்கவே புத்திசாலித்தனமாக உருவாக்கப்பட்ட இந்த மெய்நிகர் குழாய்வழியமைப்பு தொழில்நுட்பம் நம் இஷ்டத்துக்கு SoCக்குள் பல பாதைகள் அமைத்துக்கொள்ள வழி செய்கிறது.
1. ஒரு பாதை வெளியிலிருந்து நேராக பாதுகாப்பு இஞ்ஜின் (மறைவிலக்கம் செய்ய) பின் வைரஸ் ஸ்கேன் இஞ்ஜின் அப்புறம் விலாசப்பிரிவு இஞ்ஜின் அதன்பின் கிளையிலுள்ள கணிணியை நோக்கி பயணம். கீழே உள்ள படத்தில் இது சிவப்பு பாதை.
2. இன்னொரு பாதை உள்ளே நுழைந்து விலாசப்பிரிவு இஞ்ஜினை மட்டும் தொட்டுவிட்டு இணையத்தை நோக்கி ஓட்டம். படத்தில் இது பச்சைப்பாதை.
3. இன்னொரு பாதை உள்ளே வந்து நேராக பொதுநோக்குச்செயலியை சென்றடைவது. படத்தில் இது நீலப்பாதை.
Data_Coherent_Memory_Interconnect_Virtual_Pipeline_Transfer_Controllers_Network_Memory
இப்படி டஜன் கணக்கில் பல பாதைகளை மெய்நிகர் குழாய்வழிகளாய் (Virtual Pipes) ஒரே சமயத்தில் அமைத்துக்கொண்டு லட்க்ஷக்கணக்கான பொட்டலங்களை ஒவ்வொரு வினாடியும் கையாள முடியும். எல்லா பாதைகளும் ARM பொதுநோக்கு செயலிகளை தொட்டுப்பார்த்து நமஸ்காரம் செய்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயங்கள் ஏதும் கிடையாது. மொத்தத்தில் ஒரு தொழிற்சாலைக்குள் பல்வேறு இயந்திரங்கள் ஒரே சமயத்தில் பல்வேறு திறன்களுடன் இணையாக இயங்கி தேவைக்கேற்றார் போல் வேலைகளை முடித்துக்கொடுப்பதை இந்த ஒரு SoCக்குள்ளும் நிகழ்த்த முடிகிறது! இன்னொரு விதத்தில் நமது தபால் நிலைய உதாரணத்திலிருந்து பார்த்தால் இந்த ஒரு SoC 16 பணியாளர்கள், விலாசம் பார்த்து கடிதங்களை பிரிக்கும் இயந்திரம் (MPP: Modular Packet Processor Engine), சங்கேதமொழியில் எழுதப்பட்ட கடிதங்களை சாதாரண ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கும் இயந்திரம் (IPSec: Internet Protocol Security Engine), கிருமிகள் ஏதாவது இருக்கிறதா என்று ஸ்கேன் செய்யும் இயந்திரம் (DPI: Deep Packet Inspection Engine), உள்ளே வந்த கடிதங்கள் சேதம் ஏதும் அடையாமல் வந்துள்ளனவா என்று பார்க்கும் இயந்திரம் (PIC: Packet Integrity Check Engine) என்ற எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிய ஒரு பெரிய கட்டிடம்!

காலம் மாறிக்கொண்டிருக்கிறது..!

1980களில் என் தகப்பனார் தமிழ்நாட்டில் ஒரு சிறிய கிராமத்தில் வங்கி மேலாளராக பணி புரிந்துகொண்டிருந்தார். அப்போது அவர் கிளைக்கு புதிதாக தொலைபேசி இணைப்பு கொடுக்கப்பட்டது. வங்கியின் தொலைபேசி எண் 27. எண்ணுக்கு மொத்தம் இரண்டே இலக்கங்கள்தான்! ஊரில் தொலைபேசி இணைப்பு இருந்த இன்னொரு இடம் மின்சார அலுவலகம். அதன் எண் 22. கொஞ்சம் அடித்து மழை பெய்தால் இணைப்பு காணாமல்போய் விடுவது வழக்கம். அப்படி ஒருமுறை தொலைபேசி இணைப்பு துண்டுபட்டு 10 நாட்களுக்குப்பின் திரும்ப வந்தது. இணைப்பு திரும்பிவந்ததில் இருந்து வங்கிக்கு வந்த தொலைபேசி அழைப்புக்கள் எல்லாம் “ஏங்க, எங்க வீட்டுக்கு எப்போ கரண்ட் வரும்?” என்பதாகவே இருந்தது! பிரச்சினையை புரிந்து கொண்ட என் தந்தையார் தொலைபேசி நிலையத்தை கூப்பிட்டு வங்கிக்கும் மின்சார நிலையத்துக்குமான தொலைபேசி இணைப்புகள் மாறி இருப்பது போல் தெரிகிறது என்று கூறி இருக்கிறார். நிலைமையை புரிந்து கொண்ட தொலைபேசி நிலைய இளம் பொறியாளர், திரும்பவும் ஒரு ஆளை இதை சரியாக்க இந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கு பதிலாக, அந்த தொலைபேசி நிலையத்திலேயே அவர் மேஜைக்கு பின்னால் இருக்கும் பேனலில் அந்த இரண்டு ஒயர்களையும் வெட்டி மாற்றி இணைத்து பிரச்சினையை சமாளித்தார்!
LSI_AXM_5500_Communication_Processor
அந்த எளிமையான காலக்கட்டதிலிருந்து 25 வருடங்கள் கழித்து பிறந்திருக்கும் நாற்பத்தி மூன்று சதுர மில்லிமீட்டர் பரப்பளவு கூட இல்லாத இந்த செயலிக்குள் 380 கோடி டிரான்சிஸ்டெர்கள் அடைத்து வைக்கப்பட்டு இருக்கின்றன. திருப்பி பார்த்தால் கீழ்ப்புறம் 1680 உலோக புள்ளிகள் தெரியும். ஒவ்வொரு புள்ளியும் பிணையத்துடன் இச்செயலி தொடர்பு கொள்ள ஏற்படுத்தப்பட்டிருக்கும் தொடுபுள்ளிகள் (contact points). வினாடிக்கு 8000 கோடி பிட்டுகளை கையாளக்கூடிய இந்த ராட்சச செயலி, ஒரே சமயத்தில் லட்சக்கணக்கான தொலைபேசி இணைப்புகளையும் இணைய இணைப்புகளையும் இனம் பிரித்து வழங்க வல்லது. இது செல்போன் டவர், ஆயிரக்கணக்கான இணைய இணைப்புகளை கையாளும் மத்திய அலுவலகங்கள் போன்றவற்றில் உபயோகப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், இதன் குடும்பத்தை சேர்ந்த திறன் குறைக்கப்பட்ட தம்பி தங்கை வடிவங்கள் சிறிய அலுவலகங்கள் மற்றும் எதிர்கால வீடுகளில் நுழைந்து பணியாற்ற வல்லவை. என் தந்தையின் வங்கியில் நிகழ்ந்தது போன்ற இணைப்பு மாற்றங்கள் தொடர்பாடல் செயலிகளை உபயோகித்து தொலைபேசி இணைப்பு கொடுக்கும்போது வருவதில்லை. ஏனெனில் உங்கள் தொலைபேசி எண் உங்கள் வீட்டுக்கு வரும் கேபிளை பொருத்ததில்லை. அது உங்கள் வீட்டில் இருக்கும் திசைவியிலும் மற்றும் இருபுறங்களிலும் ஓடித்திரியும் பொட்டலங்களிலும் பொதிந்திருக்கிறது. உதாரணமாக வானேஜ் (Vonage) என்ற ஒரு அமெரிக்க டெலிஃபோன் கம்பெனியின் திசைவியை இணையத்தில் எங்கே இணைத்தாலும், அது நியூயார்கோ காட்டேறிகுப்பமோ, அது உங்கள் வீட்டு தொலைபேசி எண்ணாகவே வேலை செய்து உங்களுக்கு அழைப்புகளை அமைத்து தருகிறது. பன்னாட்டு கைபேசிகளிலும் (International cellphone) ஒரே எண் உலகம் முழுவதும் வேலை செய்வதை நாம் பார்க்கிறோம்.
நிச்சயமாக இந்த AXM5500 பரிணாம வளர்ச்சி புத்தகத்தின் கடைசி அத்யாயம் ஒன்றும் இல்லை. போன வாரம் எல்‌எஸ்‌ஐ நிறுவனத்தை அவாகோ (Avago Technologies) என்ற இன்னொரு நிறுவனம் .ஓட்டு மொத்தமாக வாங்கி விட்டது! ஃப்‌ரீஸ்கேல் (Freescale), மார்வெல் (Marvel), ப்ராட்காம் (Broadcom) என்று பல போட்டி நிறுவனங்கள் புதிய செயலிகளைப்படைப்பதில் கடும் தீவிரத்துடன் ஈடுபட்டுள்ளன. பதினாறு ARM பொதுநோக்கு செயலிகளுக்கு பதில் முப்பத்திரண்டு அல்லது அறுபத்திநான்கு ARM பொதுநோக்கு செயலிகளை உள்ளே உட்கார வைத்திருக்கும் SoC சில்லுகளின் உருவமைப்பு இப்போதே நடந்து கொண்டிருக்கிறது. மொத்தம் எட்டே எட்டு இணைப்புகளுடன் ஒரு எட்டுக்கால் பூச்சி போல் தோன்றிய 555 ஐ‌சி காலத்தில் இருந்து, நுண்செயலிகள், பிணையச்செயலிகள், தொடர்புச்செயலிகள் என்று பல பரிணாமங்களைத்தாண்டி வெகுதூரம் வந்துவிட்டோம். IC சில்லுகள் தயாரிப்பவர்கள் இப்படி கலப்பு கட்டமைப்பு (Hybrid Architecture) முறைகளில் சில்லுகளை உருவாக்கினாலும், விதம்விதமான ஒடுக்கிகளைக்கொண்டு ஒரு நிரலியை பல செயலிகளில் ஓட்டுவது போல, SoC கட்டமைப்பைப்பற்றி கவலைப்படாமல் மென்பொருட்களாலேயே வரையறுக்கப்படும் பிணையங்கள்தான் (Software Defined Networking) இணைய சொர்கத்துக்கு ஒரே வழி என்று இன்னொரு எண்ணம் சிறகு விரித்திருக்கிறது. இன்னும் ஐம்பது வருடங்களில் பிணையம் எப்படி உருமாறும் என்பது ஒருவருக்கும் தெரியாத சிதம்பர ரகசியம். எனினும் கடந்த ஐம்பது வருடங்கள் இந்தத்துறை முன்னேறும் வேகத்தைப்பற்றி நமக்கு கற்று கொடுத்திருப்பதிலிருந்து அந்த ரகசியத்தை நாம் துரத்திக்கொண்டு ஓடும் வழியில் இன்னும் பல அற்புதங்களை நம் வாழ்நாளிலேயே பார்க்கப்போகிறோம் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.
(முற்றும்)
oOo

தொடர்பாடல் செயலிகளின் பரிணாம வளர்ச்சி – 3

First published at Solvanam.com on May 4, 2014

Handshake_Bits_Circuits_IC_Human_Computer_Moores_Law_Computers_Connection_Bytes_Transfer_Data

மூரின் விதி?

இன்டெல் நிறுவனத்தை நிறுவிய இருவரில் ஒருவரான கோர்டென் மூர் (Gordon Moore) என்பவர் 1965ஆம் வருடம் ஒரு கட்டுரை எழுதினார். அந்தக்கட்டுரையில், அதற்கு முந்தைய ஐந்தாறு வருடங்களாக IC சில்லுகளுக்குள் திணிக்கப்படும் டிரான்சிஸ்டர் போன்ற உதிரி பாகங்கள் வருடத்திற்கு ஒரு முறை இரண்டு மடங்காக அதிகரித்து வருவதை கவனித்து, அதே போக்கு இன்னும் பத்து வருடங்களுக்காவது தொடரும் என்றும் எழுதி இருந்தார். இது போன்ற ஜோசியங்களை இதற்கு முன்னும் பின்னும் வேறு பலர் கூட சொல்லி இருக்கிறார்கள். மூர் முதலில் வருடத்துக்கு ஒருமுறை பாகங்கள் செறிவு (Component Density) இரட்டிக்கும் என்று சொன்னதை 1975 வாக்கில் மாற்றி இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை என்று மறுகணிப்பும் செய்தார். பின்னால் வேறு ஒருவர் செறிவு இரட்டிப்பாக தேவைப்படும் காலம் ஒன்றரை வருடம் என்று சொன்னதும் உண்டு. அறிவியலில் விதி என்று சொல்லப்படுபவை எல்லாம் மிகச்சரியாக அறுதியாக சொல்லப்பட்டு பரிசோதனைகள் மூலம் நிரூபணம் செய்யப்பட்ட உண்மைகளாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் இது என்னவோ இந்தத்துறையின் முன்னேற்றங்களை கவனித்து மூர் உத்தேசமாய் செய்த வெறும் ஒரு கணிப்புதான். ஆனாலும் ஏதோ ஒரு யோகத்தில் அவருடைய இந்தக்கருத்து பிரபலமாகி, மூரின் விதி (Moore’s Law) என்று இன்றும் சொல்லப்பட்டு வருகிறது.
Sundar_Vedantham_3_Intel_Moore
இந்த இரட்டிப்பு வருடத்திற்கு ஒருமுறை இல்லாமல் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நிகழ்ந்தாலும் கூட, இது ஒரு வியப்பூட்டும் அற்புதம்தான். ஏனெனில் ஒரு சதுர செண்டிமீட்டருக்குள் நம்மால் திணிக்க முடியும் டிரான்சிஸ்டெர்களின் எண்ணிக்கை 2, 4, 6, 8, 10, 12 வருடங்களில் முறையே 1, 2, 4, 8, 16, 32 மடங்காக பெருகுகிறதே! ஆங்கிலத்தில் exponential rise என்று சொல்லப்படும் இத்தகைய வளர்ச்சியின் வேகத்தை சின்னக்குழந்தைகளுக்கு சொல்லப்படும் குட்டிக்கதை ஒன்றை நினைவுபடுத்துவதன் மூலம் எளிதாகப்புரிந்து கொள்ளலாம். வெளிநாட்டிலிருந்து வந்து ஒரு நாட்டில் இருந்த அத்தனை சதுரங்கப்போட்டியாளர்களையும் வென்ற ஒரு விற்பன்னன் மன்னரிடம் பரிசு பெற வருகிறான், மன்னர் அவனிடம் உனக்கு என்ன பரிசு வேண்டும் என்று கேட்கிறார். அவன் பணிவுடன் ஆனால் ஒரு நமட்டுச்சிரிப்பு சிரித்துக்கொண்டு, “உங்கள் நாட்டு அரிசி எனக்கு மிகவும் பிடிக்கும். சதுரங்க விளையாட்டுதான் எனக்கு சாப்பாடு போடுகிறது என்பதால், என் சதுரங்க பலகையின் முதல் கட்டதிற்கு ஒற்றை அரிசி தானியத்தை கொடுங்கள், அடுத்த கட்டத்திற்கு இரண்டு அரிசி, அடுத்ததற்கு நான்கு அரிசி, அடுத்ததற்கு எட்டு அரிசி என்று இரட்டித்து கொண்டேபோய் என் சதுரங்க பலகையிலிருக்கும் அத்தனை கட்டங்களுக்கும் அரிசி கொடுத்தீர்களானால் போதும்” என்கிறான். இவ்வளவுதானா என்று வியந்த அரசர் ஒரு மூட்டை அரிசியை கொடுத்து பாக்கி இருப்பதையும் நீயே வைத்துக்கொள்ளலாம் என்கிறார். இந்தக்கதை அப்புறம் எப்படி போகும் என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். சதுரங்க பலகையில் 64 கட்டங்கள் இருப்பதால், மன்னர் அவனுக்கு அரிசி தானிய எண்ணிக்கையை 64 முறை இரட்டிப்பாக்கி கொடுக்க வேண்டும். கொஞ்சம் யோசித்தால் உலகிலுள்ள அத்தனை அரிசியையும் சேர்த்தாலும் இவ்வளவு தேராது என்பது புரியும்! இது நம் உள்ளுணர்வுக்கு எளிதாக எட்டாததற்கு காரணம் அடுக்குக்குறிக்குரிய வளர்ச்சியின் (exponential rise) .வேகத்தை நாம் சரியாக புரிந்து கொள்ளாததுதான்.
மூர் விதிக்கு சமமாக வேறு பல கணிப்புகளும் மின்னணுவியலில் உண்டு. உதாரணமாக ஒரு வார்த்தையை கணிணியில் சேமித்து வைக்க ஆகும் விலை இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பாதியாகும் (கிரய்டெரின் விதி: Kryder’s Law), ஒளியிழை வழியே அனுப்பப்படும் தகவல் செறிவு வருடத்துக்கு ஒரு முறை இரட்டிக்கும் (பட்டெர்ஸ்ஸின் விதி: Butters Law), சில்லுகளை இயக்க தேவையான மின்திறன் சில்லுகளின் நீள அகலத்திற்கு ஈடானதாகவே இருக்கும் (டெனார்டின் விதி: Dennard Scaling). இந்த அதிவேக தொழில்துறை வளர்ச்சியல்தான் வருடா வருடம் புதுப்புது அம்சங்களுடன் தொலைபேசி, கணிணி, தொலைக்காட்சி போன்ற மின்னணுவியல் கருவிகள் வெளிவந்தாலும் அவற்றின் விலை அப்படி ஒன்றும் ஏறுவதில்லை. எந்தவித முன்னேற்றமும் இல்லாவிட்டாலும் கத்தரிக்காய் விலை பத்து வருடத்தில் எவ்வளவு ஏறி இருக்கிறதென்று பாருங்கள்!
முதலில் ஏதோ சாதாரணமாய் இந்த கணிப்பு உருவாக்கப்பட்டு இருந்தாலும், கடந்த ஐம்பது வருடங்களாய் இது தவறாமல் உண்மையாகிக்கொண்டு இருக்கிறது! வெளிப்படையாக சொல்லப்பட்டதாலேயே சில தீர்கதரிசனங்கள் உண்மையாவது உண்டு (ஆங்கிலத்தில் Self Fulfilling Prophecies). மூரின் விதியை இந்த வகையில் சேர்த்துக்கொள்ளலாம். ஏனெனில், பல வருடங்களாக இது உண்மையாகிக்கொண்டு இருக்கிறது என்பதாலேயே இப்போதெல்லாம் புதிய செயலிகளை டிசைன் செய்ய ஆரம்பிக்கும்போது அதன் ஆற்றல்திறன் எவ்வளவு இருக்க வேண்டும் என்ற விவரக்குறிப்புகள் (specifications) எழுதும் பொறியாளர்கள் இதைச்செய்து முடிக்க இரண்டு வருடங்கள் ஆகும் என்பதால் இதன் செயல்திறன் இப்போதைய செயலியை விட இரண்டு மடங்காவது இருக்க வேண்டும் என்று தாங்களாகவே எழுதிவிடுகிறார்கள். இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விட்டதால் இரண்டு வருடங்களில் எப்படியாவது இழுத்துப்பிடித்து அந்த திறனை கொண்டுவந்தும் விடுகிறார்கள்!
இதைப்பற்றி சற்று யோசனை செய்து பாருங்கள். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை சில்லுகளின் திறன் இரட்டிக்கிறது என்று கொண்டால், ஐம்பது வருடங்களில் சுமார் இருபத்தைந்து முறை செயல்திறன் இரட்டிப்பாகி இருக்க வேண்டும். வேறு விதத்தில் சொன்னால், 1965ல் உருவாக்கப்பட்ட சில்லுகளோடு ஒப்பிட்டு பார்த்தால் இன்றைய சில்லுகள் 3.3 கோடி மடங்கு அதிகத்திறன் வாய்ந்தவை. ஆனால் சில்லுகளின் விலை என்னவோ அதேதான்! 1960களில் மனிதனை நிலவுக்கு அனுப்ப உபயோகிக்கப்பட்ட கணிணிகளின் செய்திறனும் (Processeing Capacity) கொள்திறனும் (Storage Capacity) இன்றைய கைபேசிகளில் சாதாரணமாக காணப்படுகிறது. 2005 வாக்கில் மூர் தன் பெயர் கொண்ட அந்த கணிப்பு பௌதீக விதிகளின் நிதர்சனங்களால் நெருக்கப்பட்டு கலாவதியாகிவிடும் தூரம் வெகுதூரதில் இல்லை என்று சொல்லியிருக்கிறார். ஆனால் இரண்டு வருடங்களுக்கு பதில் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை செயலிகளின் திறன் இரட்டித்தாலும் கூட மேலும் பல வியக்கத்துக்குரிய அற்புதங்களை நாம் செயலாக்க அது வழி வகுக்கும்.
இந்த முன்னேற்றங்களைப்பற்றி இவ்வளவு விளக்கமாக சொன்னதின் காரணம், இதே மாற்றங்கள் செயலிகளின் விலையை ஏற்றாமல் அவற்றின் திறனை வருடா வருடம் அதிவேகமாக அதிகரிக்க வைத்தது என்பதால்தான். பிணையச்செயலிகளை வைத்து திசைவிகள் செய்வது பற்றி பார்த்தோமல்லவா? அச்செயலிகள் நியூசிலாந்தின் தபால்நிலையத்தில் பயன்படும் இயந்திரம் போல என்றால், அந்த இயந்திரத்தை தினமும் காலையில் பொத்தானை அமுக்கி இயக்கத்தை ஆரம்பித்து வைப்பது, நாலு கடிதங்கள் தவறி கீழே விழுந்தால் அவற்றை எடுத்து திரும்ப இயந்திரதிற்குள் போடுவது போன்ற குறைந்தபட்ச வேலைகளுக்காக ஒரு பணியாளராவது தேவைப்படுகிறார் இல்லையா? அதேபோல் பிணையச்செயலிகளை வைத்து செய்யப்பட்ட திசைவி பெட்டிகளிலும், சில குறைந்தபட்ச ஆனால் அவ்வப்போது மாறும் வேலை தேவைகளுக்காக ஒரு சிறிய பொதுநோக்கு செயலியையும் வைக்க வேண்டி இருந்தது.
காரை வாடகைக்கு எடுக்கும் போது அது டிரைவருடன் வருவது போல, 2000க்கு அப்புறம் வந்த பிணைப்புசெயலிகளில் ஒரு குட்டி பொதுநோக்கு செயலியையும் போட்டு மூடி கொடுக்க ஆரம்பித்தார்கள். இந்த குட்டி பொதுநோக்கு செயலி திறனில் சிறியதாக இருந்தாலும் திசைவி சாதன பெட்டிகளில் அந்த பிணையச்செயலிகளை எழுப்பி ஓட வைக்கவும், தேவையான ஒன்றிரண்டு ஆணைகளை கொடுக்கவும் தேவையான நிரலிகளை ஓட்ட போதுமானதாக இருந்ததால், திசைவிகள் செய்யத்தேவையான உதிரிபாகங்கள் பட்டியலில் இருந்து பொதுநோக்கு செயலியை அடித்து அடக்க விலையை குறைக்க முடிந்தது.

சேவைத்தர நிர்ணயம்

இந்த நூற்றாண்டில் இணைய உபயோகம் அதிகரிக்க அதிகரிக்க, அதில் பல்வேறுபட்ட சேவைகளும் அறிமுகப்படுத்தப்பட்டது நமக்கு தெரிந்த விஷயம். இணைய இணைப்பு வழங்கும் நிறுவனத்தில் இருந்து எங்கள் வீட்டுக்கு ஒரு கேபிள்தான் வருகிறது. அந்த ஒரு கேபிள் வழியாகவே தொலைபேசி இணைப்பு, தொலைக்காட்சி இணைப்பு மற்றும் இணைய இணைப்பு மூன்றும் கிடைத்து விடுகிறது. இதை பொதுவாக “ட்ரிபிள் பிளே” (Triple Play) என்று சொல்வது வழக்கம். முன்போல் இல்லாமல் இப்போது இந்த மூன்று சேவைகளுமே டிஜிட்டல் அமைப்புகளாக இருப்பதால் ஒரே குழாய் வழியே எல்லா சேவைகளையும் வழங்கிவிட முடிகிறது. இதனால் தொலைபேசி நிறுவனங்களுக்கும் கேபிள் கம்பெனிகளுக்கும் இடையே இருந்த வித்யாசங்கள் மறைந்து கொண்டு வருகின்றன. சேவைகளைத்தருவது ஒரே நிறுவனம், வருவது ஒரே குழாய் என்றாலும், அந்த கேபிள் குழாய்க்குள் தலையை விட்டுப்பார்த்தால், இந்த மூன்று வித சேவைகளை கொண்டுவரும் பொட்டலங்களும் அவற்றின் தேவைகளும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை, மேலும் ஒன்றுக்கொன்று முரணானவை என்பதும் தெரியவருகிறது. ஒரு வீட்டுக்குள் வரும் கேபிளின் கடப்புத்திறன் (Transferring Capacity) ஒரு வினாடிக்கு இரண்டு கோடி பிட் என்று வைத்துக்கொண்டு இந்த மூன்று சேவைகளையும் சற்று கூர்ந்து கவனிப்போம். (கூகிள் அமெரிக்காவின் குறிப்பிட்ட சில நகரங்களில் இணைய இணைப்பு சேவையை ஆரம்பித்து, வீடுகளுக்கும் அலுவலகங்களுக்கும் இதைப்போல் ஐம்பது மடங்கு வேகமான இணைப்பை (1 Gbps) கொடுக்க ஆரம்பித்திருக்கிறது!)
Bits_Pipeline_Data_Xfer_Wifi_Wireless_Copper_Information_Technology_IT_Transistors_CPU_zero_ones_KB_MB
தொலைபேசி: வாய்ப் (VoIP: Voice over Internet Protocol) என்று சொல்லப்படும் இந்த சேவைக்கு தேவையான அலைக்கற்றை (Bandwidth) ரொம்பக்குறைவு. இரண்டு கோடி பிட் கொள்திரனில் ஒரு சதவிகிதம் கூட இதற்கு தேவை இல்லை. நாம் ஃபோனில் பேசும்போது நம் குரலை குட்டி டிஜிட்டல் பொட்டலங்களாக்கி அனுப்பவும் பெறவும் வினாடிக்கு ஒரு லட்சம் பிட் அளவுதான் தேவைப்படும். ஆனால் நமது குரலைத்தாங்கிச்செல்லும் அந்த குட்டி பொட்டலங்களுக்கு பிணையம் முழுதும் வி‌ஐ‌பி மரியாதை கொடுத்து படுவேகமாக பறக்க விட வேண்டும், நடுநடுவே கால் வினாடி தாமதங்கள் வந்தாலும் செல்போனில் சிக்னல் சரியில்லை என்று சொல்வது போல் வீட்டு போனிலும் சொல்லத்தோன்றும். நமது குரலை பொட்டலங்களாக மாற்றும்போது கூட பெரிய பொட்டலங்களாக கட்டுவதற்காக ஆயிரம் பைட்டுகள் சேரும் வரை காத்திருந்தால் கால தாமதம் ஏற்பட்டு தொடர்பின் தரம் குறையும் என்று ஃபோன் உரையாடலை தாங்கிச்செல்லும் பைட்டுகள் ஒரு ஐம்பது அறுபது சேர்ந்த உடனேயே பொட்டலத்தை முடித்து விருவிருவென்று தபாலில் அனுப்பி விடுகிறார்கள். பொட்டலங்கள் உருண்டோடுவது இரண்டு திசைகளிலும் என்பதையும் இந்த பொட்டலங்கள் பிணையம் முழுதும் இரண்டு திசைகளிலும் தங்குதடையின்றி பறந்தால்தான் தொலைபேசியில் உங்களால் வசதியாக பேச முடியும் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
தொலைக்காட்சி: IPTV (Internet Protocol Television) என்று சொல்லப்படும் இந்த சேவையின் தேவைகள் ஒரு விதத்தில் தொலைபேசிக்கு தலைகீழானது. அலைக்கற்றை தேவை மிக அதிகம். ஒரு உயர் வரையறை தொலைகாட்சி சேனலை (High Definition TV Channel) கொண்டுவர வினாடிக்கு ஒரு கோடி பிட்டுக்கு மேலேயே தேவைப்படும். சாதாரண சேனலுக்கு கூட அரைக்கோடி பிட். ஆனால் பொட்டலங்கள் பாய்வது ஒரு திசையில்தான். நீங்கள் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டு இருக்கும் போது உங்கள் வீட்டுக்கு வீடியோ வருகிறதே தவிர உங்கள் வீட்டிலிருந்து வீடியோ எதுவும் வெளியே போவதில்லை அல்லவா? தவிர ஒரு சேனலை நீங்கள் பார்க்க ஆரம்பித்தவுடன் அந்த வீடியோவை கொஞ்சம் புஃபர் (Buffer) செய்துவிட்டால் பின்னால் வரும் பொட்டலங்கள் சற்று முன்பின்னாக வந்தாலும் சமாளித்துக்கொள்ளலாம். யூட்யூப் போன்ற இணைய தளங்கள் உங்கள் இணைப்பின் வேகம் என்ன என்பதை வினாடிக்கு வினாடி கணிப்பு செய்து அதற்கேற்றாற்போல் அதிக அல்லது குறைந்த தரமுள்ள வீடியோவை உங்களுக்கு அனுப்பி வீடியோ ஓடும்போது நடுவில் நிற்காமல் இருக்க தந்திரங்கள் செய்கிறது.
Infotech_Data_Internet_Web_Machines_Things_Computers_Blue_Video_Audio_VOIP_Telephony
இணையம்: இணையத்தை மேய்வதற்கு தேவையான அலைக்கற்றை அளவு மற்ற இரண்டு சேவைகளுக்கு இடையில் விழும். இந்த சேவையை வழங்கும் பொட்டலங்கள் இரண்டு திசைகளிலும் பயணிக்கும் என்றாலும் உங்கள் வீட்டுக்கு வரும் பொட்டல எண்ணிக்கை மறுதிசையில் ஓடும் பொட்டலங்களின் எண்ணிக்கையை விட மிகவும் அதிகமாகவே இருக்கும். இந்த பொட்டலங்களுக்கு வி‌ஐ‌பி மரியாதை தேவை இல்லை. நீங்கள் மின்னஞ்சல் படிக்கும்போதோ ஒரு இணைய தளத்தை அணுகும்போதோ ஒன்றிரண்டு வினாடிகள் தாமதம் இருந்தாலும் அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை அல்லவா?
மூன்று சேவைகளுக்கான இந்த குணாதிசயங்களை மேலும் போட்டு குழப்பிவிட பல்வேறு புதிய சேவைகளும் தேவைகளும் தினந்தோறும் வந்து கொண்டு இருக்கின்றன. உதாரணமாக நீங்கள் உங்கள் கணிணியில் யூட்யூப் தளத்தில் இருந்து ராஜராஜசோழன் படம் பார்க்க ஆரம்பித்தால், தொலைக்காட்சி சேவைக்கான தேவைககள் உங்கள் கணிணிக்கு பொருந்தும். கணிணியிலிருந்து ஸ்கைப் வழியாக ஊரில் இருக்கும் பாட்டியுடன் பேச ஆரம்பித்தால் தொலைபேசி சேவைக்கான தேவைகள் கணிணிக்கு பொருந்தும். மாறாக எக்ஸ்பாக்ஸ், நிண்டெண்டோ சாதனங்களை உபயோகித்து டி‌வி மற்றும் இணையம் வழியாக பூமிக்கு அந்தப்பக்கம் இருக்கும் பங்காளியுடன் ஊடாடும் வீடியோ கேம் விளையாடினீர்களானால், தொலைபேசியின் “என் பொட்டலங்கள் எங்கும் நிற்கக்கூடாது” என்ற அவசரம் தொலைக்காட்சிக்கு வந்து விடுகிறது!
இப்போதெல்லாம் அமெரிக்க வீடுகளில் சாதாரணமாக ஒரு டஜனுக்கு மேற்பட்ட கருவிகள் இணையத்தோடு இணைக்கப்பட்டு, நாள் பூராவும் விடாமல் அரட்டை அடித்துக்கொண்டு இருக்கின்றன. ஒரு வீட்டில் மூன்று தொலைக்காட்சி பெட்டிகள், ஒரு மேஜை கணிணி, ஒன்றிரண்டு மடிக்கணிணிகள், ஒன்றிரண்டு பலகை கணிணிகள், நிண்டெண்டோ, எக்ஸ்பாக்ஸ் போன்ற விளையாட்டு பெட்டிகள், ரோக்கூ (Roku) ஆப்பிள் டி‌வி (Apple TV) கூகிள் டி‌வி (Google TV) போன்ற இணையத்திலிருந்து வீடியோ தருவித்து காட்டும் கருவிகள் எல்லாம் இருப்பது சகஜம். இதற்கு மேல் குடும்பத்தில் இருப்பவர்கள் வைத்திருக்கும் ஆண்ட்ராய்ட் (Android), ஐஃபோன் (iPhone) போன்ற நான்கைந்து ஸ்மார்ட்ஃபோன்களும் வீட்டு பிணையத்தின் (Home Network) வழியாக இணையத்துடன் இணைந்திருக்கின்றன. சம்பிரதாயமாக நாம் இணையமுனையம் (Internet Terminal) என்று கருதும் மேஜை கணிணிகள் மட்டும்தான் உபயோகம் முடிந்தவுடன் ஆஃப் செய்யப்படுகின்றன. ஆனால் ஸ்மார்ட்ஃபோன் போன்ற கருவிகள் 24 மணிநேரமும் விழித்திருந்து, நிமிடத்திற்கு ஒருமுறை இணையத்துடன் தொடர்பு கொண்டு தான் இருக்கும் இடத்தை பதிவு செய்வது, அப்போதைய தட்பவெப்ப நிலை, பங்கு சந்தை நிலவரம், புதிய உலகச்செய்திகள், உங்கள் அத்தைமகனோ, மாமன் மகளோ போன நிமிடம் பேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் என்ன சொன்னார்கள் என்று தேடிப்பார்த்து தரவிறக்கம் செய்வது என்று கொட்டமடித்துக்கொண்டே இருக்கின்றன.
ஓரளவு கணிணியை போல இருக்கும் இந்த மாதிரியான சமாசாரங்களை பிணையத்துடன் இணைப்பதை தாண்டி அடுத்த அலையாக கையில் கிடைத்த சாமான்களை எல்லாம் பிணையத்தோடு இணைக்கும் முயற்சியை “சாமான்களின் இணையம்” (Internet of Things) என்ற பெயரில் ஏற்கனவே ஆரம்பித்து விட்டார்கள். நீங்கள் இணையத்துடன் எப்போதும் இணைத்திருந்து பொட்டலங்களை தொடர்ந்து இணையத்துக்குள் அனுப்பி திரும்பப்பெற்று கொண்டே இருக்கும் கூகிள் கண்ணாடி (Google Glass) பற்றி நிச்சயம் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அடுத்த படத்தில் காணப்படும் கருவி வீடுகளில் உள்ள ஏர் கண்டிஷனரை nest_Celsius_Thermostat_Degrees_Temperature_IOTகட்டுப்படுத்த உபயோகிக்கப்படும் கண்ட்ரோலர். வருடம் பூராவும் நீங்கள் எந்த மாதிரி சீதோஷணநிலை வீட்டில் இருப்பதை விரும்புகிறீர்கள் என்று நீங்கள் இதை உபயோகிக்கும் விதத்தில் இருந்து அறிந்து கொண்டு, அதையெல்லாம் இணையத்தில் பதிவு செய்து உங்கள் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் போகப்போக இதுவே உங்கள் வீட்டு ஏர் கண்டிஷனரை பார்த்துக்கொள்ளும்! இணையத்தோடு இதுவே பேசிக்கொள்வதால் இன்று மதியம் குளிருமா அல்லது வெய்யில் அடிக்குமா, ஈரப்பதம் எப்படி இருக்கும் என்பதெல்லாம் இதற்கு ஒரு நாள் முன்பாகவே தெரிந்து விடுகிறது. அந்த முன்னறிவை பயன்படுத்தி சிக்கனமாக மின்சாரத்தை உபயோகித்து கரண்ட் பில்லை குறைக்கவும் வழி செய்யும். இதை உருவாக்கிய நெஸ்ட் என்ற கம்பெனியை சமீபத்தில் கூகிள் வாங்கிவிட்டது.
இவை இரண்டு உதாரணங்கள் என்றால், அடுத்த படம் வீட்டில் இருக்கும் வேறு என்னென்ன சமாசாரங்கள் எல்லாம் விரைவில் இணையத்தோடு சம்பாஷிக்கப்போகின்றன என்று காட்டுகிறது. வீட்டுக்கோ கடைகளுக்கோ பாதுகாப்பளிக்கும் அலார்ம் அமைப்புகளை செய்து கொடுக்கும் நிறுவனங்கள் நீங்கள் வேறு ஒரு ஊரில் ரெஸ்டாரண்டில் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது திடீரென்று நேற்று வீட்டை விட்டு கிளம்பியபோது பின் கதவை தாளிட்டோமா இல்லையா என்று சந்தேகம் வந்தால், உங்கள் ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்தி இணையம் வழியே உங்கள் சொந்த ஊரில் இருக்கும் வீட்டின் கொல்லைப்புறக்கதவை தாளிடலாம் என்று இப்போது தொலைக்காட்சியில் விளம்பரம் செய்கிறார்கள். பால் தீரப்போகிறது என்று தெரிந்தவுடன் உங்கள் வீட்டு ஃபிரிஜ் நீங்கள் வாடிக்கையாக மளிகை சாமான்கள் வாங்கும் கடையின் கணிணியை இணையம் வழியே கூப்பிட்டு ஒரு லிட்டர் பாலுக்கு ஆர்டர் கொடுப்பது இன்னும் பெருவாரியாக நடைமுறைக்கு வரவில்லை எனினும் இன்றே அது சாத்தியம்.
Internet_Of_Things_IOT_Communication_Media_Big_Data_House_Homes_Connected_Devices_Fridge_Appliances
இந்த மாறுதல்களை எல்லாம் சுட்டிக்காட்டியதற்கு காரணம், இவை ஒவ்வொன்றும் புதிய புதிய விதமான தகவல் பொட்டலங்களை இணையத்தில் வாரி வீசப்போகின்றன என்பதுதான். கி.பி. 2020 வாக்கில் சுமார் 3000 கோடி சாமான்கள் இணையத்தில் இணைத்திருக்கும் என்கிறது ஏ‌பி‌ஐ ரிசர்ச் (ABI Research) என்ற ஒரு நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கை. இந்த சாமான்களுக்கெல்லாம் அவை தரும் சேவைகளுக்கேற்ப விதம்விதமான தேவைகள். இந்த எல்லாத்தேவைகளையும் முறையாக சமாளிக்க ஒரே வழி தேவைக்கேற்ப பொட்டலங்களின் தலைப்பில் வெவ்வேறு விதமான முத்திரைகள் குத்தி, பிணையம் முழுதும் அந்த முத்திரைகளுக்கேற்ப அவற்றிற்கு மரியாதை கொடுப்பதுதான்.
முந்தைய இதழில் நாம் பார்த்த இந்த தலைப்பு ஏரியா (header) ஞாபகம் இருக்கும். இதில் ப்ரோடோகால் (Protocol) என்று ஒரு எட்டு பிட் வைத்திருக்கிறார்கள் இல்லையா? அந்த இடத்தில் பொட்டலத்துக்குள் இருக்கும் விஷயம் எந்த மாதிரியானது என்று குறிப்பிட நூற்றிநாற்பது குறியீடுகளுக்கு மேல் இணைய உலகில் சொல்லி வைக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் சேவை வகை (Type of Service) என்று இன்னொரு எட்டு பிட் தலைப்பில் அமைக்கப்பட்டு இருப்பதையும் படத்தில் பார்க்கலாம். இந்த இடத்தை “அவசரம்”, “மிக அவசரம்”, “சாதாரண தபால்” என்று தரம் பிரித்து முத்திரைகள் குத்த உபயோகிக்கலாம். தொடர்புச்செயலிகள் விலாசம் பார்த்து பொட்டலங்களைப்பிரிப்பத்தோடு, இந்த குறிப்புகளையும் படித்து திருப்பதியில் இலவச தரிசனம், நூறு ரூபாய் டிக்கெட் வாங்கியவர்கள், ஆயிரம் ரூபாய்காரர்கள் என்று தனித்தனி வரிசைகள் அமைத்து பக்த்தர்களை அனுப்புவதுபோல் பொட்டலங்களை வெவ்வேறு வரிசைகளில் போட்டு வழியனுப்பி வைக்கின்றன. எனவே உங்கள் தொலைபேசி சம்பாஷணையை தாங்கிச்செல்லும் பொட்டலங்கள், “VoIP”, “மிக அவசரம்” முதலிய முத்திரைகளை பெற்றுக்கொண்டு வி‌ஐ‌பி போல இணையம் எங்கும் பறக்க முடியும்.
இணையத்தில் நாடுகளையும் பெரிய பெரிய நிறுவனங்களையும் ஒன்றோடு ஒன்றாக இணைக்க கொள்திறன் (bandwidth capacity) மிகவும் அதிகமான ஒளியிழை நார்களை (Optical Fiber) உபயோகிக்கிறார்களாமே அப்போது கூட போக்குவரத்து நெரிசல் உண்டா என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு பதில் மூன்று விதங்களில் தர வேண்டும்.
DataFlow_Transformations_Rainbow_Bits_Bytes_Zero_ones_WWW_World_Wide_Web_Net_IT
1. IC சில்லுகளின் செறிவைப்பற்றி சொல்லும் மூரின் விதியைப்போல இணையத்தில் பறக்கும் தகவல்களின் அளவும் ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை இரட்டித்துக்கொண்டு இருக்கிறது. இந்த வேகத்தை சமாளிக்க ஒரு புறம் பிணையக்கொள்திரணை அதிகரித்துக்கொண்டேதான் இருக்க வேண்டியதிருக்கிறது. மறுபுறம் ஏற்படும் நெரிசல்களை புத்திசாலித்தனமாக சமாளித்து எல்லாவிதமான சேவைகளையும் தாமதங்கள் இல்லாமல், நுகர்வோரை வெறுப்பேற்றாமல் வழங்க வேண்டிய அவசியமும் இருக்கிறது.
2. நாடுகளுக்கு இடையேயும் பெரிய நிறுவனங்களுக்கு இடையேயும் பெரிய கொள்திறன் கொண்ட தொடர்பு இணைப்புகள் இருக்கலாம். அவை மறுபுறம் பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்கும் கடைகளுக்கும் அலுவலகங்களுக்கும் இணைப்புகள் கொடுப்பதால் அங்கெங்கும் வரும் போகும் அத்தனை பொட்டலங்களையும் சேர்த்து ஒரு குழாய்க்குள் திணிக்கும் போது அங்கேயும் நெரிசல் ஏற்படத்தான் செய்கிறது.
3. தவிரவும் நம் வீட்டு குழாயில் தண்ணீர் நன்கு வர நம் ஊருக்கும் அடுத்த ஊருக்கும் இடையே பெரிய குழாய் இருந்தால் மட்டும் போதாது. இல்லையா? நம் பேட்டைக்கும், தெருவுக்கும், வீட்டுக்கும் வரும் குழாய்கள் நெரிசலை தவிர்க்குமளவுக்கு பெரிதாக இருந்தால்தான் வீட்டுக்கு நல்லபடியாக தண்ணீர் வந்து சேரும். அதே போல் இணையதளம், தொலைக்காட்சி நிலையம், பாட்டி வீடு என்று எல்லா இடங்களில் இருந்தும் நம் வீட்டு வரைக்கும் நெரிசல் ஏற்படுத்தாத தேவையான கொள்திறன் கொண்ட இணைப்புகள் இருந்தால்தான் ஒவ்வொரு சேவையும் நம் வீட்டுக்கு ஒழுங்காக வந்து சேரும்.
எனவே பிணையத்தின் ஒவ்வொரு கணுவிலும் (Node) சரியான திறனுடன் கூடிய தொடர்பாடல் செயலி ஒன்றை வேலைக்கு அமர்த்தி, பொட்டலங்கள் வழிதவறி விடாமல் பார்த்துக்கொண்டு போக்குவரத்து நெரிசல்களையும் சரியாக நிர்வகித்து இணையத்தை வழி நடத்த வேண்டியது மிகவும் அவசியம்.
(தொடரும்)
oOo